
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்தின் முதல்கட்ட ஒப்பந்தத்தின்படி, அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் ராணுவமும் காஸாவில் இருந்து தங்களின் படைகளைத் திரும்பப் பெறும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளைக் கடந்து இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே போர் நடைபெற்று வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்துக்கான 20 அம்ச திட்டத்தை அறிவித்தார்.
இதுதொடர்பாக எகிப்தின் ஷா்ம் எல்-ஷேக் நகரில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முதல்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர் முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை மிகவும் பெருமையுடன் அறிவிக்கிறேன். இதனைத் தொடர்ந்து, அனைத்து பணயக் கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். இஸ்ரேல் தனது படைகளை ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைக் கோட்டிற்கு திரும்பப் பெறும். இது வலுவான, நீடித்த மற்றும் என்றென்றும் நிலைத்திருக்கும் அமைதிக்கு முதல் படியாகும்.
அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள். இன்று, அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு மகத்தான நாளாகும்.
இந்த வரலாற்று நிகழ்வு நடைபெறுவதற்கு எங்களுடன் பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அமைதியை ஏற்படுத்துபவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.