உலகிலேயே முதல்முறையாக பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்ட முதியவர் 171 நாள்கள் வாழ்ந்துள்ளார்.
பன்றியின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை மனிதனுக்கு பொருத்தும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் பெரும்பாலானவை வெற்றியும் பெற்று வருகின்றன. பன்றியின் உறுப்புகள் மனிதர்களின் உறுப்புகளுடன் நன்கு ஒத்துப்போவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் உலகிலேயே முதல்முறையாக சீனாவில் பன்றியின் கல்லீரல் ஒன்று 71 வயது முதியவருக்கு பொருத்தப்பட்டு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த நபர் 171 நாள்களுக்குப் பிறகு இரைப்பை குடல் ரத்தப்போக்கு காரணமாக இறந்துள்ளார்.
சீன அன்ஹுய் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் 2024 மே மாதம், முதியவர் ஒருருக்கு ஹெபடைடிஸ் பி, பெரிய கல்லீரல் கட்டி இருந்த நிலையில் மனித கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சாத்தியமாகாத நிலையில் மரபணு மாற்றப்பட்ட 11 மாத பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்டது.
நோயாளியின் கல்லீரலில் உள்ள கட்டியை அகற்றி கல்லீரலின் மீதமுள்ள பகுதியில் பன்றியின் கல்லீரலை வெற்றிகரமாக இணைத்தனர். பன்றியின் கல்லீரல் மிகவும் நன்றாகவே செயல்பட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதன் உதவியுடன் அவர் 38 நாள்கள் உயிர் வாழ்ந்தார். பின்னர் அவரது கல்லீரல் போதுமான அளவு செயல்பட்டபோது பன்றியின் கல்லீரல் அகற்றப்பட்டது. இதில் சில சிக்கல்கள் இருந்த நிலையிலும் மனிதனுக்கு பன்றியின் கல்லீரல் பொருந்திப்போனது உறுதியானது.
மற்ற உறுப்புகளைப் போல கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை எளிதல்ல, பல செயல்பாடுகளைக் கொண்ட கல்லீரலின் வேலைகளைச் செய்வது அவ்வளவு சாதாரணமானதல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
உலகில் கல்லீரல் பிரச்னையால் பலரும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு காத்திருக்கும் நிலையில், பன்றியிலிருந்து மனிதனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்று இந்த மருத்துவ சிகிச்சை உறுதி செய்வதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப் போகிறீர்களா? எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.