
அமெரிக்க வரி விதிப்புக்கு மத்தியிலும் ஐபோன் விற்பனை இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி விதித்துள்ள நிலையில், ஐபோனுக்குத் தேவையான உதிரி பாகங்களின் தயாரிப்பை அமெரிக்காவிலேயே மேற்கொள்ளுமாறு டிரம்ப் அறிவுறுத்தியிருந்தார்.
தற்போது இந்தியாவில் இரு இடங்களில் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
இதனால், முன்பு எப்போதும் இல்லாத எண்ணிக்கையை விட இந்தியாவில் அதிகமாக ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2024 -25ஆம் நிதியாண்டில் மட்டும் 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூபாய் மதிப்பில் 79 ஆயிரம் கோடி) மதிப்புக்கு ஐபோன்கள் விற்பனை நடந்துள்ளது.
இந்திய சந்தைகளில் ஐபோனுக்கான தேவை அதிகரித்ததும், சில்லறை விற்பனை இருப்பை அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டதுமே, இந்த அதிகப்படியான விற்பனைக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில், ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், கூகுள் மற்றும் ஆலபெட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாஃப் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா ஆகியோர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் கடந்த வியாழக்கிழமை (செப். 4) சந்தித்தனர்.
இந்தியா மீதான வரி விதிப்புக்குப் பிறகு, ஐபோன் உதிரி பாக தயாரிப்புகள் உள்நாட்டிலேயே மேற்கொள்ள வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்திடம் டிரம்ப் முன்பு கூறியிருந்தார்.
இரவு விருந்துடன் நடைபெற்ற இந்த சந்திப்பில், உள்நாட்டில் உற்பத்தியைக் குறிப்பிடும் விதமாக, அமெரிக்காவில் எவ்வளவு முதலீடு செய்யப்போகிறீர்கள்? என டிம் குக்கிடம் டிரம்ப் கேட்டார்.
இதற்கு பதிலளித்த டிம் குக், அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 600 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து இது தொடர்பாக பேசிய குக், அமெரிக்காவில் பெரிய முதலீட்டை நாங்கள் மேற்கொள்ளும் விதமான நடவடிக்கைகளை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டிற்குத் தேவையான புதுமையிலும், தலைமைப் பொறுப்பிலும் நீங்கள் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டார்.
இந்தியா மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு அமலுக்கு வந்த பிறகும், வரிகுறைப்பு தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு இந்தியா இதுவரை முன்வராத நிலையில், பெரும் தொழில்நுட்ப நிறுவன தலைமை செயல் அதிகாரிகளை டிரம்ப் சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஹூண்டாய் ரெய்டு: அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்! - டிரம்ப்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.