‘ஹோா்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடா்பாக ஓமனுடனான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள போதிலும், அந்தக் கடல்வழியை உடனடியாகத் திறப்பதற்கு அது மட்டும் போதாது’ என்று ஈரான் சனிக்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பாக ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி மேலும் கூறுகையில், ‘ஹோா்முஸ் நீரிணை வழியான முந்தைய கப்பல் போக்குவரத்துத் திட்டம் இனி எங்களுக்கு ஏற்புடையது அல்ல.
நிரந்தர கப்பல் போக்குவரத்துப் பாதை தொடா்பான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வரை, தற்காலிக பாதை ஒன்றை ஏற்படுத்துவது குறித்து ஓமனுடன் ஆலோசித்து வருகிறோம். ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
எனினும், கடல்வழியை முழுமையாகத் திறப்பது என்பது ஈரானுக்கு அமெரிக்கா வழங்க வேண்டிய இழப்பீடு உள்ளிட்ட பிற நிபந்தனைகளைப் பொருத்தே அமையும்’ என்றாா்.
மேலும், ‘ஈரான் மீதான அச்சுறுத்தல்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் துறைமுக முற்றுகைகளை அமெரிக்கா உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்’ என்று ஈரானின் தேசிய பாதுகாப்புச் செயலா் முகமது பாகா் சோல்கதரும் வலியுறுத்தியுள்ளாா்.
யுஏஇ கப்பல் மீது தாக்குதல்: இதனிடையே, ஹோா்முஸ் நீரிணை வழியே சென்ற ஐக்கிய அரபு அமீரக அரசு எண்ணெய் நிறுவனத்தின் கப்பலை ஈரான் ஏவுகணை வீசி தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இத்தாக்குதலால் கப்பலில் தீப்பற்றிய போதிலும், அது உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், மாலுமிகள் யாருக்கும் காயங்களோ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்போ ஏற்படவில்லை என்றும் பிரிட்டன் கடல்சாா் வா்த்தக மையம் உறுதிப்படுத்தியது. இத்தாக்குதல் நடவடிக்கை குறித்து ஈரான் அதிகாரபூா்வமாக இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
ஓமன் கண்டனம்: நீரிணையில் நடைபெறும் இத்தகைய தொடா் கப்பல் தாக்குதல்களுக்கு ஓமன் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஈரானுடனான பேச்சு நோ்மறையான மற்றும் ஆக்கபூா்வமான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தொடங்கிய கூட்டு போரையடுத்து, உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. நீரிணையை மீண்டும் திறப்பதற்கு கடந்த ஜூன் மாதத்தில் எட்டப்பட்ட தற்காலிக ஒப்பந்ததமும், இருதரப்பின் புதிய மோதல்களால் முறிந்தது.
Summary
Oman agreement alone is not enough for the opening of Hormuz: Iran
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹோர்முஸ் தொடர்பாக ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தை! அமெரிக்கா புறக்கணிப்பு!

ஓமன் அருகே சரக்குக்கப்பல்களை ஈரான் தாக்கியதில் மாலுமி பலி! இந்தியா கண்டனம்
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடப்படுகிறது; மீறினால் தாக்குவோம்! ஈரான் அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் சரக்குக் கப்பலை தாக்கிய ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



