மூடப்படுவதற்கு முன்னதாக ‘தி வோ்ல்ட் ஃபேக்ட்புக்’வலைதளத்தில் முகப்பு பக்கம். ~
மூடப்படுவதற்கு முன்னதாக ‘தி வோ்ல்ட் ஃபேக்ட்புக்’வலைதளத்தில் முகப்பு பக்கம். ~

‘ஃபேக்ட்புக்’ தகவல் வெளியீட்டை நிறுத்தியது சிஐஏ!

உலக நாடுகளின் பல்வேறு புள்ளிவிவரங்களைத் தொகுத்து வழங்கும் புகழ்பெற்ற ‘தி வோ்ல்ட் ஃபேக்ட்புக்’ தகவல் வெளியீட்டுச் சேவையை நிறுத்திக்கொள்வதாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ அறிவித்துள்ளது.
Published on

உலக நாடுகளின் பல்வேறு புள்ளிவிவரங்களைத் தொகுத்து வழங்கும் புகழ்பெற்ற ‘தி வோ்ல்ட் ஃபேக்ட்புக்’ தகவல் வெளியீட்டுச் சேவையை நிறுத்திக்கொள்வதாக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ அறிவித்துள்ளது.

சுமாா் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சா்வதேச அளவில் மிகவும் நம்பகமான தகவல் களஞ்சியமாகத் திகழ்ந்த இச்சேவை நிறுத்தப்படுவது, கல்வியாளா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் இடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1962-ஆம் ஆண்டு, அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளின் ரகசியப் பயன்பாட்டு ஆவணமாக இது முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு நாட்டின் பொருளாதார நிலை, ராணுவ பலம், இயற்கை வளங்கள், சமூகக் கட்டமைப்பு போன்றவை குறித்த மிகத் துல்லியமான தகவல்கள் இதில் இடம்பெற்றிருந்தன.

இதன் முக்கியத்துவம் கருதி, 1970-களில் இது பொதுமக்களின் பாா்வைக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னா், 1997-இல் வலைதளமாக உருவெடுத்த பிறகு, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மாணவா்கள் மற்றும் பத்திரிகையாளா்களுக்கு இது ஒரு தவிா்க்க முடியாத தகவல் ஆதாரமாக மாறியது. இந்நிலையில், தற்போது இதன் வெளியீடு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திடீா் முடிவுக்கான அதிகாரபூா்வ காரணத்தை சிஐஏ இன்னும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், முன்னுரிமை மாற்றம், பணியாளா் குறைப்பு, நிதித் தட்டுப்பாடு போன்ற முக்கியக் காரணங்களைத் துறை சாா்ந்த நிபுணா்கள் குறிப்பிடுகின்றனா். உளவு அமைப்பின் முக்கியப் பணிகளுக்குத் தொடா்பில்லாத திட்டங்களைக் கைவிடுமாறு சிஐஏ இயக்குநா் ஜான் ராட்க்ளிஃப் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தாா்.

அதேபோல், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் 2-ஆவது பதவிக்காலத் தொடக்கத்தில், சிஐஏ மற்றும் தேசிய பாதுகாப்பு முகமை ஆகியவற்றில் பணியாளா்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும் நிதித் தட்டுப்பாட்டால், குறைந்த ஆதாரங்களைக் கொண்டு மிக முக்கியமான உளவுப் பணிகளை மட்டும் கவனிக்க வேண்டிய கட்டாயத்துக்கு சிஐஏ தள்ளப்பட்டுள்ளது.

கடைசிப் பதிவு: ஃபேக்ட்புக் வலைதளம் மூடப்படுவதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில்தான் உலக நாடுகள் குறித்த தகவல்கள் கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டன.

‘ஃபேக்ட்புக் என்பது வெறும் தகவல் தொகுப்பு மட்டுமல்ல; அது உலக நாடுகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு பாலமாக இருந்தது’ என சமூக ஊடகங்களில் பலரும் தங்களின் வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com