

கராச்சி : இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியாகும் தடுப்பூசிகள் நிறுத்தப்பட்டிருப்பது, அந்நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் ஏழை நாடுகளுக்கு குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் மற்றும் நோயெதிர்ப்புத்திறன் மருத்துகள் வழங்கி உதவும் பொருட்டு தனியார் பங்களிப்புடன் ‘உலகளாவிய தடுப்பூசிகள் மற்றும் நோயெதிர்ப்புத்திறன் அதிகரிப்புக்கான கூட்டணி (ஜி.ஏ.வி.ஐ)’ உதவியுடன், பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகள் பெற்று மக்களுக்கு வழங்கி உதவி வருகின்றன. அந்த வகையில், உலக மக்கள்தொகையில் ஐந்தாவது பெரிய நாடான பாகிஸ்தானுக்கும் ஜி.ஏ.வி.ஐ. முன்னெடுப்பால் இந்தியாவிடமிருந்து பெருமளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், கடந்தாண்டு பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்குப்பின், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்தாண்டு மே மாதத்துக்குப்பின், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியாகும் தடுப்பூசிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஜி.ஏ.வி.ஐ.-இன் 49 சதவீத பங்களிப்புடன் ஆண்டுக்கு 400 மில்லியன் டாலர் செலவில் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யும் பாகிஸ்தானுக்கு, இந்தியாவுடனான மோதல்போக்கால் நிதிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால், தடுப்பூசி இறக்குமதிக்காக 2031இல், ஆண்டுக்கு 1.2 பில்லியன் டாலர் செலவிடும் சூழல் உருவாகும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, நிதிச்சுமையை தணிக்க, உள்நாட்டில் தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு நிலையை எட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.