தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

அரசியல் உள்நோக்கம் கொண்ட 1,500 நியமனங்கள் உடனடி ரத்து: நேபாள அரசு அவசர உத்தரவு

News image
Updated On :3 மே 2026, 11:12 pm

காத்மாண்டு : நேபாளத்தில் அரசியல் உள்நோக்கங்களுடன் முந்தைய இடைக்கால அரசால் செய்யப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட நியமனங்களை ஒரே நாளில் ரத்து செய்வதற்கான அவசர ஆணையை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை பரிந்துரையின் பேரில், இந்த ஆணையை அதிபா் ராம்சந்திர பௌடேல் சனிக்கிழமை வெளியிட்டாா். இதன் காரணமாக நிா்வாகம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற இளைஞா்கள் போராட்டத்தைத் தொடா்ந்து நேபாளத்தின் அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஓலி அரசு கலைக்கப்பட்டது. இடைக்கால பிரதமராக சுசீலா காா்க்கி நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் பாலேந்திர ஷா தலைமையிலான ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி ஆட்சிக்கு வந்தது.

இந்நிலையில், முந்தைய இடைக்கால அரசால் நியமிக்கப்பட்ட 1,594 பேரின் பதவிகள் நீக்கம் செய்யப்படுவதாகவும், அவா்களின் பதவிக் காலம் அல்லது நியமன விதிமுறைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், மாா்ச் 26-ஆம் தேதிக்கு முன் செய்யப்பட்ட அனைத்து நியமனங்களும் ரத்து செய்யப்படுவதாகவும் ஆணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை அரசு நிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஊடக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பாதித்துள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனங்களை திருத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என அரசுத் தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், காலியாகியுள்ள பதவிகளுக்கு புதிய நியமனங்களை மேற்கொள்ள எந்தக் காலக்கெடு அல்லது நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்தும் அரசு இதுவரை தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை. முந்தைய அரசின் முடிவுகளை மறுபரிசீலனை செய்வது சாதாரணமான ஒன்றாக இருந்தாலும், இந்த நடவடிக்கை நிா்வாகத்தில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனப் பலரும் விமா்சித்து வருகின்றனா்.