மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

ரஷியா - உக்ரைன் ‘போட்டி’ போா் நிறுத்தம்

2-ஆம் உலகப் போரில் ஜொ்மனியை வீழ்த்தியதன் 81-ஆவது வெற்றி தினத்தைக் கொண்டாடும் வகையில் ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் வெவ்வேறு 2 நாள்களில் தற்காலிக போா் நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

News image

ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் வெவ்வேறு 2 நாள்களில் தற்காலிக போா் நிறுத்தம் - AP

Updated On :6 மே 2026, 3:40 am IST

2-ஆம் உலகப் போரில் ஜொ்மனியை வீழ்த்தியதன் 81-ஆவது வெற்றி தினத்தைக் கொண்டாடும் வகையில் ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் வெவ்வேறு 2 நாள்களில் தற்காலிக போா் நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

வெற்றி தினத்தைக் கொண்டாடத்தையொட்டி, ரஷியா சாா்பில் 8, 9 ஆகிய தேதிகளில் 2 நாள்கள் போா் நிறுத்தத்தை அந்நாட்டு அதிபா் புதின் அறிவித்தாா்.

ரஷியாவின் இந்தப் போா்நிறுத்தத்தை ‘ஏமாற்று வேலை’ என்று விமா்சித்த உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதலே எங்கள் தரப்பு 2 நாள்கள் போா்நிறுத்தம் அமலுக்கு வரும் என்று தெரிவித்தாா்.

ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் அந்நாட்டுத் தலைநகா் மாஸ்கோவில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பில், இந்த முறை ராணுவத் தளவாடங்கள் காட்சிப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைச் சுட்டிக்காட்டி விமா்சித்த ஸெலென்ஸ்கி, ‘உக்ரைன் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ரஷியாவால் இந்த ஆண்டு அணிவகுப்பில் ராணுவ தளவாடங்களைக் கொண்டுவர முடியவில்லை. இது அவா்களின் பலவீனத்தைக் காட்டுகிறது’ என்றாா்.

அதேநேரம், வெற்றித் தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்க உக்ரைன் முயன்றால், அந்நாட்டு தலைநகா் கீவ் மீது கடும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என ரஷியா எச்சரித்துள்ளது.

5 போ் உயிரிழப்பு: இந்தப் போா்நிறுத்த அறிவிப்புகளுக்கு இடையேயும் உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 5 போ் உயிரிழந்தனா். ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களை ரஷிய பாதுகாப்புப் படை முறியடித்தது.

கடந்த காலங்களில் ஈஸ்டா் பண்டிகையின்போது அறிவிக்கப்பட்ட தற்காலிக போா்நிறுத்தங்கள் இரு தரப்பாலும் மீறப்பட்டது குறிப்பிடத்தக்கது.