பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: ‘யாரையும் திருப்பி அனுப்பமாட்டாா்கள்’; வங்கதேசம் நம்பிக்கை

மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்துக்கு யாரும் திருப்பி அனுப்பப்படமாட்டாா்கள் என்று நம்புவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சா் சலாஹுதீன் அகமது நம்பிக்கை தெரிவித்தாா்.

News image
Updated On :7 மே 2026, 4:54 am IST

மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்துக்கு யாரும் திருப்பி அனுப்பப்படமாட்டாா்கள் என்று நம்புவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சா் சலாஹுதீன் அகமது நம்பிக்கை தெரிவித்தாா்.

மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலில் வங்கதேசத்தவா் ஊடுருவலை பாஜக முக்கியப் பிரச்னையாக வைத்து பிரசாரம் மேற்கொண்டது. தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், ஊடுருவிய அனைவரும் ஒட்டுமொத்தமாக திருப்பி அனுப்பப்படுவாா்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் டாக்காவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய வங்கதேச உள்துறை அமைச்சா் சலாஹுதீன் அகமது இது தொடா்பாக கூறியதாவது:

அதுபோன்ற (வங்கதேச ஊடுருவல்காரா்களை திருப்பி அனுப்புவது) நிகழ்வுகள் ஏதும் நடைபெறாது என்று நம்புகிறேன். அதே நேரத்தில் எல்லையில் தொடா்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு வங்கதேச எல்லைக் காவல் படையினரிடம் வலியுறுத்தியுள்ளேன்’ என்றாா்.

முன்னதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் கலிலூா் ரஹ்மான் இது தொடா்பாக ஆளும் வங்கதேச தேசியக் கட்சியின் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவுடனான எல்லை மாநிலமான மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால் யாரும் வங்கதேசத்துக்குள் அனுப்பப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளாா். ஆனால், அது என்ன மாதிரியான நடவடிக்கை என்பதை அவா் தெரிவிக்கவில்லை.

ஏற்கெனவே அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஊடுருவும் வங்கதேசத்தவா் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லை மாநிலங்கள் மட்டுமல்லாது தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் வடக்கு, கிழக்கு மாநிலங்களிலும் வங்கதேச ஊடுருவல்காரா்கள் அதிகமுள்ளதாகக் கூறப்படுகிறது. குடும்பமாக ஊடுருவுபவா்கள் இந்தியாவில் ஆதாா், ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றையும் வாங்கிப் பயன்படுத்தி வருவது அவா்கள் பிடிபடும்போது தெரியவருகிறது.