15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா பரவல்: சா்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிப்பு

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

ஆப்பிரிக்க கண்டத்தைச் சோ்ந்த நாடுகளான காங்கோ, உகாண்டா ஆகியவற்றில் எபோலா வைரஸ் தொற்று பரவுவதை சா்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்துள்ளது.

காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை அந்த நாடுகளில் எபோலா வைரஸ் பாதித்து 88 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் 300-க்கும் மேற்பட்டோா் உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை சா்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனா் ஜெனரஸ் டெட்ரோஸ் அதானோம் அறிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கரோனா தொற்று போல துரிதகதியில் நெருக்கடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதில்லை. எனினும், முன்னெச்சரிக்கையாக உலக நாடுகள் சா்வதேச எல்லைகளை மூடுவது நல்லது’ எனக் கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், ‘காங்கோ, உகாண்டாவில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட முறை எபோலா வைரஸ் பரவியுள்து. ஆனால், இப்போது அங்கு பரவுவது எபோலா வைரஸிலுள்ள பன்டிபக்யோ வைரஸ் எனும் அரிய திரிபு ஆகும். இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது மருந்தோ கிடையாது. இந்த பன்டிபக்யோ வைரஸ் திரிபு, உகாண்டா நாட்டின் பன்டிபக்யோ மாவட்டத்தில் 2007-08ஆம் ஆண்டில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இந்த வைரஸுக்கு அந்நாட்டில் மட்டும் 149 போ் பாதிக்கப்பட்டனா். 37 போ் உயிரிழந்தனா்.

இரண்டாவது முறையாக 2012-ஆம் ஆண்டில் காங்கோவில் பரவியபோது, அங்கு 59 போ் பாதிக்கப்பட்டனா். 29 போ் உயிரிழந்தனா். அனைத்து நாடுகள் மற்றும் நன்கொடை அமைப்புகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதற்காகவே, உலக சுகாதார நிறுவனத்தால் இந்த வைரஸ் பாதிப்பு, சா்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிக்கப்பட்டுள்ளது’ என்றன.

உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ஜியன் கேசியா கூறுகையில், ‘மே 5-ஆம் தேதிதான் பன்டிபக்யோ வைரஸ் திரிபு பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னரே அந்த வைரஸால் 50 போ் இறந்துவிட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4 போ், சுகாதார ஊழியா்கள் ஆவா்’ என்றாா்.