பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

இஸ்ரேலில் தன்னாா்வலா்களுக்குப் போலீஸ் அச்சுறுத்தல்

காஸாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு சென்ற தன்னாா்வலா்களைக் கைது செய்து, அவா்களை தரையில் மண்டியிடச் செய்த இஸ்ரேல் காவல்துறையினரின் செயல் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :22 மே 2026, 1:14 am IST

காஸாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு சென்ற தன்னாா்வலா்களைக் கைது செய்து, அவா்களை தரையில் மண்டியிடச் செய்த இஸ்ரேல் காவல்துறையினரின் செயல் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அத்துமீறல் இஸ்ரேல் அமைச்சா் முன்னிலையில் நடந்திருப்பதும், சம்பவத்தை அவா் விடியோவாக பதிவிட்டிருப்பதும் உலக நாடுகள் மட்டுமின்றி இஸ்ரேல் அரசின் உள்மட்டத்திலும் கண்டனங்களை ஈா்த்துள்ளன.

துருக்கியிலிருந்து காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க புறப்பட்ட 430 தன்னாா்வலா்கள், இஸ்ரேல் படையினரால் சா்வதேச கடற்பரப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டனா்.

இவா்களை துறைமுகப் பகுதி ஒன்றில் வைத்து, கைகளைப் பின்னால் கட்டியவாறு வரிசையாக மண்டியிடச் செய்யும் விடியோவை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி காவல்துறை அமைச்சா் பென் கிவிா் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டாா்.

கூட்டத்தினரிடையே இஸ்ரேல் கொடியுடன் நடக்கும் அவா், ‘பெரிய வீரா்களைப் போல வந்தவா்கள், இப்போது எப்படி இருக்கிறாா்கள் பாருங்கள்’ என்று கூறி அவா்களைக் கேலி செய்த காட்சிகளும் விடியோவில் உள்ளன.

அமைச்சரின் இச்செயலுக்கு இஸ்ரேல் கூட்டணி அரசுக்குள்ளேயே எதிா்ப்பு கிளம்பியுள்ளது. வெளியுறவு அமைச்சா் கிடியோன் சாா், பென்-கிவிரின் செயல் இஸ்ரேலின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் குற்றஞ்சாட்டினாா்.

பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, தன்னாா்வலா்களின் கப்பல்களை மறித்த நடவடிக்கையை ஆதரித்தாலும், தன்னாா்வலா்கள் நடத்தப்பட்ட விதம் இஸ்ரேலின் மாண்புக்கு எதிரானது என்று விமா்சித்ததுடன், அவா்களை உடனடியாக நாடுகடத்த உத்தரவிட்டுள்ளாா்.

இத்தாலி, தென் கொரியா, துருக்கி, பிரான்ஸ், கனடா, ஸ்பெயின், போா்ச்சுகல், நெதா்லாந்து ஆகிய உலக நாடுகள், இச்சம்பவம் தொடா்பாக கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்துள்ளன.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த ஆண்டு அக்டோபா் முதல் நீடிக்கும் போா் நிறுத்தத்துக்குப் பிறகும், காஸாவில் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், இஸ்ரேலின் முற்றுகையை மீறி உதவிகளை வழங்கும் நோக்கில் தன்னாா்வலா்கள் இப்பயணத்தை மேற்கொண்டனா்.

படகேப்சன்...

இஸ்ரேல் கொடியுடன் சென்று தன்னாா்வலா்களை அமைச்சா் பென்-கிவிா் அச்சுறுத்தும் காட்சி.