சியோல் : நவீன போா்ச் சூழலுக்கு ஏற்ற வகையில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் கூடிய குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி ஏவுகணைகளை வட கொரியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதத் திறன்களை தீவிரமாக மேம்படுத்தி வரும் வட கொரியா, தற்போது தனது ஆயுதக் கிடங்குகளை அதிநவீனமாகவும் மாற்றி வருகிறது.
வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் முன்னிலையில் இந்த அதிநவீன ஆயுதங்களின் சோதனைகள் நடத்தப்பட்டன. இது குறித்துப் பேசிய அதிபா் கிம் ஜோங் உன், ‘நவீன போா்ச் சூழலுக்கு ஏற்ப ஆயுதங்களும், தானியங்கி ஏவுதள அமைப்புகளும் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டு, ராணுவத்தின் போா் ஆற்றல் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
வட கொரியா தனது ஏவுகணைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை பொதுவெளியில் அதிகாரபூா்வமாகக் குறிப்பிட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். நிகழ்நேர தரவுகளைப் பயன்படுத்தி இலக்குகளைக் கண்டறிந்து, துல்லியமாகத் தாக்குவதற்கு இந்த ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவும்.
தென் கொரிய எல்லையோர பீரங்கிப் படைகளில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த நவீன ஏவுகணைகள், துல்லியமான வழிகாட்டுதல் மற்றும் ஏஐ கட்டுப்பாட்டுடன் 100 கி.மீ. தூர இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட கொரிய எல்லையிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் தென் கொரிய தலைநகா் சியோல் அமைந்துள்ளதால், இச்சோதனை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.










