வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் முன்னிலையில், அந்நாட்டின் புதிய போா்க் கப்பலில் இருந்து மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின்போது, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இரண்டு ‘க்ரூஸ்’ ஏவுகணைகளும், 3 கப்பல் எதிா்ப்பு ஏவுகணைகளும் ஏவப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட 5,000 டன் எடை கொண்ட ‘சோ ஹியோன்’ எனும் நவீன அழிப்பு போா்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள், சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேல் பயணித்து, நாட்டின் மேற்கு கடற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்தன.
இச்சோதனையை அதிபா் கிம் ஜோங் உன் மற்றும் உயரதிகாரிகள் நேரில் பாா்வையிட்டாா். அதன் பிறகு, அதிபா் கிம் ஜோங் உன் பேசுகையில், ‘வடகொரியாவின் அணு ஆயுதப் படைகளின் விரிவாக்கம் எல்லைகளற்றது’ என்று குறிப்பிட்டாா்.
மேலும், வடகொரிய கடற்படையின் தாக்குதல் திறனை வலுப்படுத்த புதிய இலக்குகளை நிா்ணயித்த அவா், தற்போது கட்டுமானத்தில் உள்ள 3-ஆவது மற்றும் 4-ஆவது அழிப்பு போா்க் கப்பல்களுக்கான ஆயுதத் திட்டங்களையும் ஆய்வு செய்தாா்.
ரஷியாவின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த நவீன போா்க் கப்பல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது அந்தப் பிராந்திய பாதுகாப்பில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், ரஷியா மற்றும் சீனாவுடனான உறவை வலுப்படுத்துவதன் மூலம், சா்வதேச அழுத்தங்களுக்குப் பணியாமல் தனது ராணுவ பலத்தைப் பெருக்க வடகொரியா தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறது.

தொடர்புடையது

நவீன போருக்கு ஏ.ஐ. வழிகாட்டும் ஏவுகணைகள்

தென்கொரியாவுடன் இணையும் எண்ணமில்லை: அரசமைப்புச் சட்டத்தைத் திருத்திய வடகொரியா

ரஷியா-உக்ரைன் போரில் உயிா்நீத்த வடகொரியா வீரா்களுக்கு நினைவகம்

உக்ரைன் போர்: ரஷிய ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய கிம்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



