சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் இன்று (மே 30, சனிக்கிழமை) 'புளு மைக்ரோ மூன்' எனும் ஓர் அதிசய நிகழ்வு நிகழவிருக்கிறது.
புளு மூன்
புவியைச் சந்திரன் சுற்றும் கால அளவு 29.5 நாள்கள். அதனால் தோராயமாக மாதத்திற்கு ஒருமுறை பௌர்ணமி (முழு நிலவு) வரும். இதுவே மாதத்திற்கு 30 அல்லது 31 நாள்கள் என்பதால் இந்த வித்தியாசத்தின் காரணமாக ஒரே (ஆங்கில) மாதத்தில் இரு பௌர்ணமி நாள்கள் (முழு நிலவு) வரும். இவ்வாறு ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது பௌர்ணமியை 'புளு மூன்' என்று அழைக்கிறார்கள். 2 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறும்.
அந்த வகையில், நடப்பு மே மாதத்திலும் மே 1 ஆம் தேதி ஏற்கெனவே ஒரு பௌர்ணமி வந்த நிலையில், இன்று(மே 30) பௌர்ணமி நாள் வருகிறது. இந்த புளு மூன் 2 - 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது.
புளு மைக்ரோமூன்
சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (மே 30) வானில் 'புளு மைக்ரோமூன்' தோன்றவிருக்கிறது.
புவியின் நீள்வட்டப் பாதையில் சந்திரன் மிக நீண்ட தூரத்தில் (252,360 மைல் அல்லது 406,135 கிமீ தூரத்தில் ) இருக்கும்போது சந்திரன், வழக்கமானதைவிட மிகச்சிறியதாகவும் மங்கலாகவும் தெரியும். இதனாலேயே இது மைக்ரோ(சிறிய) மூன் எனப்படுகிறது. வழக்கமான அளவைவிட 6% குறைவாகவும் 10% மங்கலாகவும் தெரியும். இதுவும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. (இதுவே புவிக்கு மிக அருகில் சந்திரன் வரும்போது அதை 'சூப்பர் மூன்' என்று அழைக்கின்றனர். சூப்பர் மூனைவிட இது 14% சிறியதாக இருக்கும்).
இந்த புளு மூன், மைக்ரோ மூன் இணைந்துதான் 27 ஆண்டுகளுக்கு ஒருமுறை 'புளு மைக்ரோ மூன்' ஏற்படுகிறது.
முன்னதாக, 1999 அக். 31 ஆம் தேதியில் இந்த புளு மைக்ரோ மூன் தோன்றியது.

IANS
நீல நிறத்தில் தெரியுமா?
'புளு மூன்' என்பதால் இது நீல நிறத்தில் இருக்கும் என்று அர்த்தமில்லை. ஒரே மாதத்தில் தோன்றும் இரண்டாவது பௌர்ணமி நிலவைக் குறிப்பிட மட்டுமே இந்த பெயரைப் பயன்படுத்துகின்றனர்.
வெளிறிய வெள்ளை அல்லது பொன்னிற - ஆரஞ்சு நிறத்தில் தெரியும் என்று கூறப்படுகிறது. புவியின் வளிமண்டலம் ஒளியைச் சிதறடிப்பதன் மூலமாக இந்த நிறம் உண்டாகிறது.
புளு மூன் என்பது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் என்றாலும் சந்திரன் புவிக்கு மிக நீண்ட தொலைவில் செல்ல 27 ஆண்டுகள் ஆகும் என்பதால் இது அரிய நிகழ்வாகும்.
எப்போது பார்க்கலாம்?
உலகின் பல்வேறு பகுதிகளில் மே 31 ஆம் தேதி நிலா வரத் தொடங்கும்போது இந்த நிகழ்வைக் காண முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். வானிலை மேகமூட்டம் இன்றி தெளிவாக இருந்தால், வெறும் கண்களாலேயே இதனைப் பார்க்க முடியும்.
இந்தியாவில்...
ஆசிய பசிபிக் பகுதிகளில் குறிப்பாக இந்தியாவில், இன்று, மே 30 மாலை / இரவில் பார்க்க முடியும் என்கிறார்கள். நிலவு வரத் தொடங்கும்போது பெரிதாகவும், பொன்னிற - ஆரஞ்சு நிற ஒளியுடனும் நிலா காட்சியளிக்கும். பின்னர் வானில் மேலே எழும்பும்போது படிப்படியாகத் தனது வழக்கமான, பிரகாசமான வெள்ளை நிறத்திற்கு மாறிவிடும்.
உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆர்வலர்களுக்கு இந்த ஆண்டின் முக்கியமான, அதிசயமான வான் காட்சியாக இது இருக்கும்.
உலகில் சில பகுதிகளில் இதேபோன்றதொரு அரிய புளு மைக்ரோ மூன் நிகழ்வு 2053 ஆம் ஆண்டில்தான் நிகழும் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த அரிய நிகழ்வைத் தவறவிட வேண்டாம் என்று வானியல் ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.
முன்னதாக கடந்த 2023 ஆகஸ்ட் 30 ஆம் தேதி புளு மூன் நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Blue mirco Moon on May 30: Will this rare lunar event be visible in India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








