இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் உருவாகி, உலகம் முழுவதும் 164 நாடுகளுக்குப் பரவியுள்ள கரோனா வைரஸ், இதுவரை சுமாா் 2.19 லட்சம் பேரைத் தொற்றியுள்ளது. அதே போல பலியானர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9,000ஐ நெருங்கியுள்ளது. கரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் சீனாவின் அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. நேற்று மட்டும் இங்கு கரோனா வைரஸுக்கு 475 பலியாகியுள்ளனர்.
இதனிடையே கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151லிருந்து 166ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
அதேசமயம் கரோனா பாதிப்புக்குள்ளான 166 பேரில் 3 பேர் இறந்த நிலையில் 15 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 42, கேரளத்தில் 25, உ.பி.,யில் 16, கர்நாடகத்தில் 14, தில்லியில் 11 பேருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.