தினமணி ஆசிரியர் அவர்களுக்கு,
என் பெயர் ம.சுந்தர மகாலிங்கம். வயது 67. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிறந்து வளர்த்த ஊர். மாயாண்டிபட்டி தெருவில் உள்ள திரு மா.கோவிந்தன் பி.ஏ. நினைவு ஆரம்ப பள்ளியில் 1 முதல் 5 ம் வகுப்பு. பள்ளிக்கு தினமணி பத்திரிக்கை வரும். 1962ம் ஆண்டு என ஞாபகம். 5ம் வகுப்பு படிக்கும் காலத்தில் காலை வணக்கத்தை தொடர்ந்து பள்ளி கட்டிடம் முன்னே தினமும் அன்றய தினமணி செய்தித்தாளில் வந்த செய்திகளின் சுருக்கம் ஆசிரியரின் உதவியோடு தயாரித்து வாசித்தது மங்கிய நினைவாக இருக்கிறது.
இப்போது தர்மபுரியில் தற்காலிகமாக இருக்கிறேன். தொழில் மையம் அருகே உள்ள எர்ரபட்டியில் உள்ள ஒன்றிய பள்ளியில் இப்போது அதுபோல் குழந்தைகள் தலைப்பு செய்திகளை வாசிப்பதை காணும் சந்தர்ப்பத்தில் அரை ட்ரையர் போட்டு அன்று படித்தது நினைவுக்கு வரும்.
சில வருடங்கள் பத்திரிக்கை வாசிக்க வில்லை. உயர்நிலை பள்ளியில் 9, 10, 11 ம் வகுப்பு படிக்கையில் ஆண்டாள் கோவில் அருகே உள்ள பென்னிங்டன் நூலகத்தில் தினமணி படிக்கும் பழக்கம் மீண்டது. பென்னிங்டன் நூலகம் சென்னை கன்னிமாரா நூலகத்துக்கு இணையானது; அறகட்டையையால் இன்றும் சிறப்பாக நடக்கிறது.
பின் 1969-70ல் பி.யு.சி. படிப்புக்காக திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி. அப்போது ஆழ்வார்குறிச்சி சிறிய கிராமம். பத்திரிக்கை படிக்கவில்லை. 1970-71 ல் மதுரை தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் சேர்ந்த பிறகு தினமணி படிப்பது தொடர்ந்தது; தொடர்கிறது.
ஆசிரியர் ஏ.என். சிவராமன் எழுத்துகள் படித்தது ஞாபகம். ஏ.என்.எஸ். அவர்கள் பல புனை பெயர்களில் பொருளாதாரம், அரசியல் குறித்து எழுதியவை விரும்பி படித்ததவை. ஜெர்மனியின் விகிதாசார தேர்தல் முறைகள் பற்றி எழுதியவை குறிப்பிடத்தக்கது. ஏ.என்.எஸ். அவர்களின் புனை பெயர் களில் ஒன்று “ஒன்னரை ஏக்கர் சொந்தக்காரன்” என்பதாக ஞாபகம்.
இப்போது தலையங்கங்கள் மற்றும் நடுப்பக்க கட்டுரைகள், செவ்வாய் கிழமை "இளைஞர் மணி ", புதன் கிழமையின் "மகளிர் மணி", ஞாயிற்று கிழமையின் "கொண்டாட்டம்", "தமிழ் மணி" மற்றும் "கதிர்" படிக்கிறேன்.
சில தலையங்கங்கள் -குறிப்பாக - வரலாற்று பிழை (01 செப்.2018) - இந்தியர்கள் என்றால் இளக்காரமா (27 ஆகஸ். 2018) - சரிகிறதே ரூபாய் (22 ஆகஸ். 2018) - இதனால் ஆயிற்றா? (13 ஜூலை 2018) - சமச்சீராக இல்லாத வளர்ச்சி (22 ஜூன் 2018) - போன்றவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை; தேசிய சிந்தனையும் தேசத்தின் மீது அக்கறையும் கொன்டவை.
தருமபுரி பதிப்பு தொடங்கப்பட்டமைக்கு பாராட்டுக்கள்.
நான் 67. தினமணியோ 85. வாழ்த்துவது என்பது சம்பிரதாயம். 85ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தினமணிக்கு வாழ்த்துக்கள்.
ம.சுந்தரமகாலிங்கம்
படம்: சித்தரிப்பு