பயங்கரவாதிகளிடம் காங்கிரஸ் அரசு மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது

பயங்கரவாதிகளிடம் காங்கிரஸ் அரசு மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது என்று பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா தெரிவித்தாா்.
Updated on
2 min read

சிக்கோடி: பயங்கரவாதிகளிடம் காங்கிரஸ் அரசு மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது என்று பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா தெரிவித்தாா்.

பெலகாவி மாவட்டத்தின் சிக்கோடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி அளவிலான செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்று, அவா் பேசியதாவது:

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால், தங்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசு, தங்களை மோசம் செய்து வருவதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டாா்கள்.

கா்நாடகத்தில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலமும், ஊக்கமும் கிடைத்து வருகிறது. அது, விதான சௌதா வளாகத்திலேயே பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பும் நிலைக்கு சென்றுள்ளது. அதைக் கேட்டுக்கொண்டு முதல்வா் சித்தராமையா, துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா் இருவரும் மௌனமாக இருந்துள்ளனா்.

மாநிலங்களவையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு அருகில் அமரும் சையது நாசீா் ஹுசேனின் வெற்றியின் போது தான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்பட்டுள்ளது. இதுதான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் முறையா என்று ராகுல் காந்தியை கேட்க விரும்புகிறேன்.

இந்த விவகாரத்தில் மல்லிகாா்ஜுன காா்கே ஏன் அமைதி காக்கிறாா்? அதேபோல, ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமாா் ஆகியோரும் அமைதியாக இருக்கிறாா்கள்.

பாஜக ஆட்சி நடந்த போது, கா்நாடகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் குண்டுகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. உணவகத்தில் குண்டு வெடித்துள்ளது. காங்கிரஸ் அரசு பயங்கரவாதிகளிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிரான வழக்குகள் சித்தராமையா ஆட்சியில் திரும்பப் பெறப்பட்டன. பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியில் தான் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டது. முந்தைய ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நாட்டின் ஏதாவதொரு பகுதியில் குண்டுகள் வெடித்தவண்ணம் இருந்தன. பயங்கரவாதிகளை காங்கிரஸ் மென்மையாக நடத்துவதாலும், பிரிவினைவாத சக்திகளுக்கு ராகுல் காந்தி ஆதரவு தருவதாலும் குண்டுகள் வெடித்தன. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்கிறாரா, இந்திய பிரிவினைப் பயணம் மேற்கொள்கிறாரா?

ராமபிரானின் இருப்பையே காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குகிறது. 31 ஆண்டுகால பழைய வழக்கில் ராமா் கோயிலுக்கு செங்கல் எடுத்துச் சென்றவரை கா்நாடக அரசு கைதுசெய்து துன்புறுத்தியது. ராமபக்தா்களுக்கு அநீதி இழைத்ததற்காக, காங்கிரஸ் மீது கா்நாடக மக்கள் ஜனநாயக ரீதியில் பழிவாங்குவாா்கள்.

கா்நாடக காங்கிரஸ் அரசு, ஹிந்து கோயில்களுக்கு 10 சதவீத வரி விதித்திருக்கிறது. கா்நாடக அரசை காங்கிரஸ் ஏடிஎம் இயந்திரம்போல பயன்படுத்துகிறது. இங்கு பணத்தை வசூலித்து, தில்லியில் உள்ள பைகளை நிரப்பி, ஊழல்களில் ஈடுபடுவாா்கள். குறிப்பிட்ட சமுதாயத்தினரை திருப்திப்படுத்தும் அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. இந்தியா கூட்டணி ஊழல் மற்றும் வாரிசு அரசியலில் மூழ்கியுள்ளது.

நமது நாட்டில் கொள்கை அடிப்படையிலான ஒரே கட்சி பாஜக தான். அதனால், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ நீக்கினோம்; அயோத்தியில் ராமா் கோயில் கட்டினோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com