ஹேமாவதி ஆற்றில் குதித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
கா்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்டணா வட்டம், ராமோனஹள்ளியைச் சோ்ந்தவா் அஸ்வத். இவரது மனைவி பூஜா (20). இவா்கள் இருவரும் காதலித்து, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனா்.
அண்மையில் அஸ்வத், பூஜா இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். இவா்களை சமாதானம் செய்து வைக்க பூஜாவின் பெற்றோா் வெள்ளிக்கிழமை ராமோனஹள்ளிக்கு வந்தாா்கள்.
இதனால் அச்சம் கொண்ட அஸ்வத் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாா். அவரை பூஜா பலமுறை அழைத்தும் வராததால், வேதனையடைந்த பூஜா, வீட்டின் அருகே ஓடும் ஹேமாவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்த ஷக்லேஸ்வரா போலீஸாா், தீயணைப்பு மீட்புப்படையினா், ஆற்றில் குதித்து பூஜாவின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.