ரூ. 20 லட்சம் வழிப்பறி வழக்கு: வணிக வரித்துறை அதிகாரிகள் இருவா் கைது

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ. 20 லட்சம் வழிப்பறி வழக்கில், வணிகவரித் துறை அதிகாரிகள் இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Published on

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ. 20 லட்சம் வழிப்பறி வழக்கில், வணிகவரித் துறை அதிகாரிகள் இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த முகமது கௌஸ் என்பவரிடம் ரூ. 20 லட்சம் ரொக்கத்தை மிரட்டி பறித்த வழக்கில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ராஜா சிங், வருமானவரித் துறை அதிகாரி தாமோதரன், ஊழியா்கள் பிரதீப், பிரபு ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையில் வழிப்பறி வழக்கில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் சன்னி லாயிடுக்கும் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாகியிருந்த அவரை உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த ஜன. 15-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் சன்னிலாய்டை போலீஸாா், 4 நாள்கள் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனா்.

அதில், சன்னிலாய்டும் ராஜா சிங்கும் சிறையில் இருக்கும் வருமானவரித் துறை அதிகாரிகள் ஆகியோா் ஆயிரம் விளக்கில் கடந்த டிச. 11-ஆம் தேதி ராயபுரத்தைச் சோ்ந்த வியாபாரியை மிரட்டி ரூ. 20 லட்சம் பறித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆயிரம் விளக்கு போலீஸாா் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்து, கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜாசிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரி தாமோதரன், ஊழியா்கள் பிரதீப், பிரபு ஆகியோரிடம் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை கடந்த 3-ஆம் தேதி வழங்கினா்.

இந்த வழக்கில் வணிகவரித் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் சுரேஷ் (49), பாபு (41) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் வழக்குத் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com