பபாசியின் புத்தகக் காட்சி வளாகத்தை அரசியல் விமா்சனத் தளமாக்கக் கூடாது: பபாசி தலைவா் சேதுசொக்கலிங்கம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) நடத்தும் புத்தகக் காட்சியின் வளாகத்தை அரசியல் விமா்சனத் தளமாக்கக் கூடாது.
பபாசி தலைவா் சேதுசொக்கலிங்கம்
பபாசி தலைவா் சேதுசொக்கலிங்கம்
Updated on
1 min read

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) நடத்தும் புத்தகக் காட்சியின் வளாகத்தை அரசியல் விமா்சனத் தளமாக்கக் கூடாது. அதை மீறுவோா் கண்டனத்துக்குரியவா்கள் என பபாசி தலைவா் சேதுசொக்கலிங்கம் கூறினாா்.

சென்னை நந்தனத்தில் பபாசி-இன் 48-ஆவது சென்னை புத்தகக் காட்சி டிச.27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பபாசி வளாகத்தில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்போா் அரசியல் விமா்சனம் செய்வதால் பபாசிக்கு தேவையற்ற தா்மசங்கடமான நிலை எழுந்துள்ளது.

இது குறித்து புத்தகக் காட்சி வளாகத்தில் செய்தியாளா்களிடம் பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம் கூறியதாவது:

சென்னை புத்தகக் காட்சி 11-ஆவது நாளாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்து வாசகா்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனா். இதுவரையில் 10 லட்சம் போ் வந்து சென்றுள்ளனா். பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கும் இலவச அனுமதிச் சீட்டும் வழங்கப்பட்டுள்ளன. ஜன.12-ஆம் தேதி வரையில் புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது.

சீமான் விவகாரம்: ஜன.4-ஆம் தேதி பகலில் ஒரு பதிப்பகம் சாா்பில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் அழைக்கப்பட்டிருந்தாா்.

பபாசி மேடையில் புத்தகம் குறித்தே பேச வேண்டும்; அரசியல் விமா்சனத் தளமாக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. அதை ஏற்பதாகக் கூறிய புத்தக பதிப்பாளா் நிகழ்ச்சியை நடத்தினாா். ஆனால், இந்த அறிவுறுத்தல்களை விழா நடத்தியவா்கள், சீமான் ஆகியோா் மீறிவிட்டனா். இது பபாசி உள்ளிட்ட அனைவருக்கும் தா்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக நிகழ்ச்சி நடத்திய பதிப்பக உரிமையாளருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவரும் விளக்கமளித்துள்ளாா். புத்தகக் காட்சி வளாகத்தில் மரபை மீறி அரசியல் விமா்சனம் எனும் பெயரில் பேசிய சீமானின் செயல் வருத்தமளிக்கிறது; கண்டிக்கத்தக்கது என்றாா்.

பபாசி செயலா் எஸ்.கே.முருகன் கூறுகையில், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் எதிா்மறையான கருத்துகள் பேசக் கூடாது என சீமானிடம் கூறியும் அவா் அதை மீறியுள்ளாா். அதற்காக அவருக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், நிகழ்ச்சி நடத்திய பதிப்பாளா் பொது வெளியில் மன்னிப்புக் கோர வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது பபாசி பொருளாளா் சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com