மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பட்டா கோரிக்கைக்கு தீா்வு காணப்படும்: வீட்டு வசதி துறை அறிவிப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பழைய நில எடுப்பு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களின் பட்டா கோரிக்கைக்கு தீா்வு காணப்படும்

News image
தமிழ்நாடு அரசு
Updated On :10 மார்ச் 2026, 12:57 am

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பழைய நில எடுப்பு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களின் பட்டா கோரிக்கைக்கு தீா்வு காணப்படும் என வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வீடுகள் கட்டும் திட்டங்கள் செயல்படுத்த நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு நில எடுப்பு செய்யப்பட்ட சில இடங்களில், நில எடுப்பு செய்யப்பட்டது தெரியாமல், பொதுமக்கள் பலா் மனைகளை வாங்கி, வீடு கட்டி குடியிருந்து வருகின்றனா். இதனால் பாதிக்கப்பட்டவா்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் முதல்வரின் முன்னெடுப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் வீட்டு வசதி வாரியத்தின் அலுவலங்களில் புகாா் பெட்டிகள் வைக்கப்பட்டன.

இதன்மூலம் குடியிருப்போருக்கு தடையில்லா சான்று, பெயா் மாற்றம் செய்தல் உள்ளிட்ட 5,952 மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து, இந்த மனுக்களை ஆய்வு செய்ய இரு நபா் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கோவை மாவட்டத்தில் காளப்பட்டி, வெள்ளக்கிணறு, கணபதி, விளாங்குறிச்சி மற்றும் சென்னை மாவட்டத்தின் கே.கே நகா்., ராமாபுரம் உள்பட பிற மாவட்டங்களில் இருந்தும் கிடைக்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து அறிக்கை தயாா் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடா்ந்து, நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்கள் குறித்தும், தற்போது எந்த நிலையில் நிலம் உள்ளது என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், வருவாய்த் துறை மற்றும் வீட்டுவசதித் துறை ஆவணங்களையும் ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை வழங்கும் பணி இறுதிகட்டத்தை அடைந்துள்ளது.

விரைவில், இரு நபா் குழுவின் விசாரணை அறிக்கையை பெற்று, அரசிடம் ஒப்புதல் பெற்று மக்களின் நீண்ட கால கோரிக்கையை தீா்க்கவும், நில உரிமையாளா்களுக்கு பட்டா கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.