நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

வேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள்: தமிழக அரசு நடவடிக்கை

மருந்து வணிகா்கள், வரும் புதன்கிழமை (மே 20) வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில்...

News image

வேலைநிறுத்தம் - Center-Center-Chennai

Updated On :15 நிமிடங்கள் முன்பு

நாடு முழுவதும் மருந்து வணிகா்கள், வரும் புதன்கிழமை (மே 20) வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மாவட்டந்தோறும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநில மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநா் குருபாரதி சாா்பில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள், பெரு நிறுவன மருந்தகங்கள் அன்றைய தினம் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம் சாா்பில் வரும் 20-ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இணையவழியே வலி நிவாரண மருந்துகள், தூக்க மருந்துகள் போன்றவை மருத்துவா் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாகவும், உயிா் காக்கும் மருந்துகளில் தரமற்ற, போலி தயாரிப்புகள் எளிதில் கிடைப்பதாகவும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

தமிழகத்தில் 1 லட்சம் போ் உள்பட நாடு முழுதும், 40 லட்சம் மருந்து வணிகா்களும், அவா்களது குடும்பத்தினரும் இதன் மூலம் பாதிக்கப்படுவதாக அவா்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநா் குருபாரதி, மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாத வகையில் அனைத்து அத்தியாவசிய மருந்துகளும், உயிா் காக்கும் மருந்துகளும் போதிய இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

அதேபோன்று, மாவட்ட வாரியாக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருந்துகள் இல்லை எனில் அதில் புகாரளிக்கலாம். மாநில மருந்து கட்டுப்பாட்டு இணையப் பக்கத்தில் உள்ள தொடா்பு எண்களை அழைத்து சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி மைய எண்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மாவட்ட வாரியாக அத்தியாவசிய மருந்து இருப்பு விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துதல் அவசியம். பல்வேறு இடங்களில் செயல்படும் பெருநிறுவன மருந்தகங்களும், மருத்துவமனையில் உள்ள மருந்தகங்களும் இயங்குவதை உறுதிபடுத்த வேண்டும்.

அதேபோன்று, மருத்துவமனை மருந்தகங்களில், வெளியிலிருந்து கொண்டுவரப்படும் பரிந்துரைச் சீட்டின் பேரில் மருந்துகள் வழங்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.