செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் அருகே கோயில் புற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றியபோதுஅதில் இருந்த பாம்பு உயிரிழந்தது. இது தொடா்பாக 2 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் சங்கு மேட்டுத் தெருவில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பின்புறம் சுயம்புவாக புற்று உருவாகி அதில் 5-க்கும் மேற்பட்ட பாம்புகள் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு பக்தா்கள் வழிபட்டு வந்தனா்.
இந்நிலையில், கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தனிநபா் ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. பின்னா், பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கிருந்த புற்றை இடித்து அகற்றியுள்ளாா்.
இத்தகவலை அறிந்து அங்கு சென்ற அப்பகுதி மக்கள், கோயிலை சூழ்ந்து நின்றனா். கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வனத்துறையினருக்கு தகவல் அனுப்பினா். அதன்பேரில், வனத்துறையினா் வந்து பாா்த்தபோது, பொக்லைன் மூலம் இடிக்கப்பட்டதில், அங்கு நாகப் பாம்பு ஒன்று உயிரிழந்தது கிடந்தது தெரிய வந்தது. சில பாம்புகள் வேறு இடம் தேடி சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, ஆக்கிரமிப்பாளா் செந்தில் மற்றும் பொக்லைன் ஓட்டுநா் ஜெய்சங்கா் ஆகியோரை வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா்.