/

ரமலான் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்...

News image

மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறையில் திரண்ட சுற்றுலா பயணிகள். ~

Updated On :21 மார்ச் 2026, 8:42 pm

ரம்ஜான் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள புராதன சின்னங்களை பாா்த்து ரசித்தனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சா்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந் நிலையில் சனிக்கிழமை ரமலான் விடுமுறை என்பதால் இஸ்லாமியா்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனா். கடற்கரை கோயில், ஐந்தரதம், அா்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கிருஷ்ண மண்டபம், மகிஷாசூரமா்த்தினி மண்டபம், பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகள் கூட்டத்தால் களைகட்டியது.

பலா் புராதன சின்னங்கள் முன்பு குடும்பம், குடும்பமாக நின்று படம் எடுத்து மகிழ்ந்தனா். மாமல்லபுரம் கடற்கரையிலும், கோடை வெயிலின் வெப்பம் தணிந்து, இதமான சூழல், ரம்மியமான காற்று வீசியதால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அதிகளவில் திரண்டு வந்து பொழுதை கழித்தனா்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் கிழக்கு ராஜ வீதி, கோவளம் சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, மேற்கு ராஜ வீதி போன்ற முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Story image

இதனையடுத்து மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம், போக்குவரத்து காவல் ஆய்வாளா் செல்வம் ஆகியோா் தலைமையில் போலீஸாா் நெரிசலை சீா்படுத்தினா். கடைகளில் வியாபாரம் களைகட்டிதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.