சிறப்பு பஸ்களாக மாறிய 2,000 "டவுன்' பஸ்கள்!
சென்னை, அக். 15: தீபாவளியை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் சிறப்பு பஸ்களின் சேவை புதன்கிழமை தொடங்கியது. விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு அரசு போக்குவரத


சென்னை, அக். 15: தீபாவளியை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் சிறப்பு பஸ்களின் சேவை புதன்கிழமை தொடங்கியது.
விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு அரசு போக்குவரத்துக் கழக கோட்டங்களைச் சேர்ந்த டவுன் பஸ்கள் "திடீர் விருந்தினர்களாக' சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
போதிய பராமரிப்பும், ஓய்வும் இன்றி இந்த டவுன் பஸ்கள் "சிறப்பு பஸ்களாக' மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்ட நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்களிலும் டிக்கெட் கிடைக்காமல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்பட ஏராளமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அல்ட்ரா டீலக்ஸ் உள்ளிட்ட சொகுசு பஸ்களில் பல நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்தும், அந்த பஸ்களில் குறித்த நேரத்துக்குள் ஏற முடியாமல் பெரும்பாலான பயணிகள் அலைமோதினர்.
முன்பதிவு செய்த பயணிகள் பலர் தாங்கள் செல்ல இருந்த பஸ்கள் நிற்கும் இடத்தை அறிய முடியாமல் தவித்தனர்.
பஸ் நிலைய வளாகத்துக்குள் பொது அறிவிப்பையும் கேட்கக் கூட இயலாத அளவில் இரைச்சல் இருந்ததால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது.
சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் வேறு நபர்கள் அமர்ந்திருந்ததால் அதிர்ச்சியும், பரபரப்பும் அடைந்தனர்.
இதனால், பஸ் நடத்துநர் மற்றும் பயணிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கூச்சலும், குழப்பமும் நிலவியது.
பஸ்களில் முன்பதிவு பட்டியலை... இதைத் தவிர்க்கும் வகையில், பஸ்களிலும் ரயில்களைப் போல முன்பதிவு பட்டியலை ஒட்டலாம். இரவில் ஒளிரும் எழுத்துகள் அச்சிடப்பட்ட பட்டியலை ஒட்டினால், பயணிகளுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்துக் கழக நிர்வாகம் குறித்து மக்களிடையே நம்பகத் தன்மையும் அதிகரிக்கும்.
ஒரே நேரத்தில் ஏராளமான பஸ்கள் கோயம்பேடு நிலையத்துக்கு உள்ளே வரவும், புறப்பட்டுச் செல்லவும் இயலாததால், எங்கும் நெரிசல் தொடர்ந்தது.
இதனால் பொறுமை இழந்த ஓட்டுநர்கள் "ஹாரன்' ஒலியை அடிக்கடி தொடர்ந்து ஏற்படுத்தியதால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒலி மாசும், பஸ்களில் இருந்து வெளியேறிய டீசல் புகையும் காத்திருக்கும் பயணிகளை திக்குமுக்காடச் செய்தன.
ஊர்ந்து சென்ற வாகனங்கள்: விரைவு பஸ் கழகத்தின் டைம் கீப்பர் அறை மற்றும் விஐபி டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு முன்பு டிக்கெட் எடுக்க பலர் திரண்டதால் நெரிசல் அதிகமாக இருந்தது.
பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பின்னரும் 100 அடி சாலையில் அடிக்கடி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் ஊர்ந்து சென்றன.
விரைவு பஸ் கழகம் மட்டுமன்றி இதர அரசு போக்குவரத்துக் கழகங்களும் சென்னைக்கு கூடுதலாக சொகுசு பஸ்களை இயக்கும் நிலையில், இப்போது டவுன் பஸ்களும் வெளியூர் பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன.
எனினும், செமி டீலக்ஸ் பஸ் கட்டணமே பயணிகளிடம் வசூலிக்கப்பட்டன. பயணிகளும் வேறு வழியின்றி தங்களது ஊர்களுக்குச் செல்ல பயணத்தை தொடங்கினர்
மாநகர பஸ்களும்... சென்னையில் தற்போது 2,800 மாநகர பல்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளி நாளில் மட்டும் இதில் 2,000 பஸ்கள் பணிமனைகளில் ஓய்வெடுக்கும்.
இந்த பஸ்களை விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்களாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.
ரயிலில் சாகசப் பயணத்தை தடுக்க...: சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் நிரம்பி வழிகின்றன. நெரிசலை சமாளிக்க முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவும் தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...