சென்னை, செப். 29: சமச்சீர் கல்வியையொட்டி பொதுப் பாடத்திட்டம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வரும் நிலையில், தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள "செயல்வழிக் கற்றல் முறை' தொடருமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
வரும் கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டம், 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கடுத்த கல்வி ஆண்டுகளில் மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி புகுத்தப்பட உள்ளது.
சமச்சீர் கல்வியை முழுமையாகக் கொண்டு வரும் வகையில் மாநிலத்தில் நடைமுறையில் உள்ள மாநிலப் பாடத்திட்டம், ஓரியண்டல், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன் ஆகிய நான்கு வாரியங்களை இணைத்து "பொதுக் கல்வி வாரியம்' அமைக்கப்பட்டு உள்ளது.
1 முதல் 10-ம் வகுப்பு வரை நான்கு வாரியங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைப் படிக்கும் வகையில் பொதுப் பாடத்திட்டம், பொதுப் பாட நூல்கள் தயாரிக்கப்பட உள்ளன. பொதுப் பாடத்திட்டம் தயாரிப்பதற்கான பணியில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் ஈடுபட்டுள்ளது.
முதற்கட்டமாக நான்கு கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்களையும் ஒப்பீடு செய்யும் பணி நடந்து முடிந்துள்ளது. இப்போது வரைவுப் பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மத்திய அரசின் தேசிய கலைத்திட்ட வடிவமைப்பை (என்சிஎஃப்-2005) முன்மாதிரியாகக் கொண்டு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தொடக்கப் பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் முறை: மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.) மூலம் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை "செயல்வழிக் கற்றல் முறை' (ஏ.பி.எல்.) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறையில் மாணவர்களுக்கு வகுப்பறையில் அட்டைகள் தரப்பட்டு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்திய அளவில் வரவேற்பு பெற்றுள்ள செயல்வழிக் கற்றல் முறையை அறிந்து கொள்ள, நாட்டின் பிற மாநிலங்களும் தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்த வண்ணம் உள்ளன. சில மாநிலங்கள் செயல்வழிக் கற்றல் முறையை, இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தி உள்ளன.
தொடருமா? சமச்சீர் கல்வியையொட்டி தமிழகத்தில் ஒரே மாதிரியான பொதுப் பாடத்திட்டம் தயாரிப்பதால் அரசு பள்ளிகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரையிலான செயல்வழிக் கற்றல் முறை அப்படியே தொடருமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ""பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் செயல்வழிக் கற்றல் முறை மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் 4 வாரியங்களை இணைத்து "பொதுப் பாடத்திட்டம்' தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதில், பாடத்திட்டத்தில் வேண்டுமானால் ஒரு சில மாற்றங்கள் வரலாம்.
ஆனால் வகுப்பறையில் மாணவர்களுக்கு எப்படி கற்று தருவது என்ற யுக்தி மாறாது. எனவே இந்த அட்டை முறை, அரசு பள்ளிகளில் தொடரும்'' என்று தெரிவித்தனர்.
837 நடுநிலைப் பள்ளிகளுக்கு வகுப்பறை கட்ட
ரூ. 83 கோடி நிதி ஒதுக்கீடு
"தமிழகத்தில் தொடக்கப் பள்ளியில் இருந்து நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 837 பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்ட ரூ. 83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட ஒவ்வொரு பள்ளியிலும் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்காக மூன்று வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் சுமார் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ. 83 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்தின் மூலமாக 50 சதவீத நிதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தக் கல்வியாண்டிற்குள் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்' என்று அனைவருக்கும் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.