பொங்கல் விடுமுறை: புத்தகக் காட்சியில் குவிந்த மக்கள் வெள்ளம்

பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் சென்னை புத்தகக் காட்சியில் சனிக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் விடுமுறை: புத்தகக் காட்சியில் குவிந்த மக்கள் வெள்ளம்
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் சென்னை புத்தகக் காட்சியில் சனிக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நடத்தப்பட்டு வந்த புத்தகக் காட்சி நிகழாண்டில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சிக் கல்லூரி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை 36-வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கியது. தொடக்க விழாவுக்கு முன்னதாகவே நூற்றுக்கணக்கான பொதுமக்கள், புத்தக வாசகர்கள் அரங்குகளுக்கு வந்து புத்தகங்களை வாங்கத் தொடங்கினர்.

இந்த நிலையில் சனிக்கிழமை பெரும்பாலான பள்ளிகள், அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பொங்கல் கொண்டாட்டங்களும் தொடங்கியுள்ளன. இதனால் சனிக்கிழமை காலை முதல் சென்னை புத்தகக் காட்சியில் மக்கள் திரளத் தொடங்கினர்.

பிற்பகலுக்கு பிறகு குடும்பத்துடன் அணி அணியாக வந்த ஆயிரக்கணக்கான வாசகர்கள் தாங்கள் எதிர்பார்த்து வந்த அரங்குகளுக்குச் சென்று விருப்பமான நூல்களைத் தேர்வு செய்து வாங்கினர்.

புத்தகக் காதலர்களின் எதிர்பார்ப்புகளை ஈடு செய்வதற்காகவே சுமார் 750 அரங்குகளில் கலை, இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், சிறு கதைகள், கவிதைகள், நாவல்கள், ஆன்மிகம், மொழி பெயர்ப்பு நூல்கள், தமிழ் தவிர ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள், பொது அறிவு நூல்கள், சமையல் குறிப்புகள், கணினி மென்பொருள் நூல்கள், சிறுவர்களுக்கான நூல்கள் என லட்சக்கணக்கான தலைப்புகளில் ஒரு கோடிக்கும் அதிகமான அளவில் வைக்கப்பட்டுள்ள நூல்களை அவர்கள் தேடி வாங்கிச் சென்றனர்.

மேலும் நூல்களைத் தவிர சி.டி.க்கள், டி.வி.டி.க்கள் போன்றவற்றையும் சிறுவர்களுக்கான பேனா, பென்சில், வரைபடங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களும் புத்தகக் காட்சியில் இடம் பெற்றுள்ளன. வாசகர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் அரங்கின் பல்வேறு பகுதிகளில் சிற்றுண்டி, தேநீர் கடைகளும், அரங்கிற்கு வெளியே உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

புத்தகக் காட்சியின் இரண்டாவது நாளில் மட்டும் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்றுள்ளதாகவும், புதிய இடத்தில் அமைக்கப்பட்டாலும் வாசகர்களின் ஆதரவு தொடர்வதாகவும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com