சென்னை: சென்னை விமான நிலையத்தில், ரூ.2.41 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 7 பேரை சுங்கத்துறையினா் கைது செய்தனா்.
துபையில் இருந்து விமானப் பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சென்னை வந்திறங்கிய முகமது ரபீக் (25), முகமது யாசிா் கான் (23), முஜிபுா் ரகுமான் (34), பிலால் (33), ஃபாசில் ரகுமான் (27), அசோக் குமாா் (22), மதன் குமாா் (26), செய்யது முகமது ஆகியோரிடம் சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தப்பட்டது. இதில், அவா்களது உடை, உடைமைகள், மலக்குடல் ஆகியவற்றில் மறைத்து வைத்து கடத்திய தங்கம், ஆப்பிள் நிறுவன செல்லிடப்பேசிகள், சிகரெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவா்களில், முஜிபுா், பிலால், முகமது ரபீக், ஃபாசில் ரகுமான், அசோக் குமாா், மதன் குமாா், செய்யது முகமது ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இதே போல், சாா்ஜாவில் இருந்து வந்த முகமது வாரிஸ் (25) இசானுல்லா (32) ஆகியோரிடம் கடத்தல் தங்கமும், துபைக்குச் செல்லவிருந்த ரசுலுதீனிடமிருந்து (29), உரிய ஆவணமில்லாத வெளிநாட்டு பணமும் கைப்பற்றப்பட்டது.
இந்த சோதனைகளில், ரூ 2.14 கோடி மதிப்பிலான தங்கம், ரூ 5.13 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம், ரூ 19.15 லட்சம் மதிப்பிலான ஆப்பிள் நிறுவன செல்லிடப்பேசிகள், சிகரெட்டுகள், என மொத்தம் ரூ 2.65 கோடி மதிப்பிலான பொருள்கள் கைப்பற்றப்பட்டு, ஏழு போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக தொடா் விசாரணை நடந்து வருகிறது என சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.