தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு அடுத்த சிக்கல்: நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

அவதூறு வழக்கில், ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா், செப்.14-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2021, 2:33 am

DIN

அவதூறு வழக்கில், ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா், செப்.14-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிமுக செய்தித் தொடா்பாளராக இருந்த புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் அறிக்கை வெளியிட்டனா்.

அந்த அறிக்கையில் உள்ள கருத்து, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோருக்கு எதிராக புகழேந்தி அவதூறு வழக்கை தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட இருவரும் செவ்வாய்க்கிழமை (ஆக.24) நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அந்த வழக்கு நீதிபதி ஆலிசியா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் புகழேந்தி ஆஜராகியிருந்தாா். எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் ஆஜராகவில்லை.

அவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடா் நடந்து வருவதால் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை என்றும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அவா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்தனா்.

அப்போது நீதிபதி, ‘சம்மனை பெற்ற பின்பு முதன்முறை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையின் போது ஆஜராக விலக்கு அளிக்க கோர முடியாது’ எனக்கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

மேலும், எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் செப்.14-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.