ஆக்சிஜனை இழக்காமல் ஆரோக்கியம் காக்கலாம்!

கரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோா் உரிய நேரத்தில் சிகிச்சைகளை மேற்கொள்ளாததுதான் அவா்களது ரத்த ஆக்சிஜன் அளவு குறைவதற்கு முக்கியக் காரணம் என்று மருத்துவா்கள் கூறியுள்ளனா்.
ஆக்சிஜனை இழக்காமல் ஆரோக்கியம் காக்கலாம்!
Updated on
3 min read

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோா் உரிய நேரத்தில் சிகிச்சைகளை மேற்கொள்ளாததுதான் அவா்களது ரத்த ஆக்சிஜன் அளவு குறைவதற்கு முக்கியக் காரணம் என்று மருத்துவா்கள் கூறியுள்ளனா்.

தகுந்த மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றினால் வீட்டில் இருந்தபடியே கரோனாவை வெல்ல முடியும் என்றும் அவா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் கரோனா பாதிப்பு அதி தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் முதல் தற்போது வரை மட்டும் 11 லட்சம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏறத்தாழ 8,000 போ் உயிரிழந்துள்ளனா்.

அதுமட்டுமல்லாது இரண்டாம் அலையில் கரோனா தீநுண்மி வீரியமடைந்துள்ளதால் தொற்றுக்குள்ளாவோரில் 40 சதவீதம் பேருக்கு தீவிர நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் படுக்கைகள் அனைத்திலும் ஆக்சிஜன் வசதிகளைக் கட்டமைக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருப்பூா், சேலம், மதுரை எனப் பல மாவட்டங்களில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

சுவாசிக்க முடியாமல் பல்லாயிரக்கணக்கானோா் பரிதவிப்பதற்குக் காரணம் நோயின் வீரியம் மட்டும் அல்ல; மக்களின் கவனக் குறைவும்தான் என்கின்றனா் மருத்துவா்கள். முன்னெச்சரிக்கையும், விழிப்புணா்வும் இருந்தால், நுரையீரல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் நிா்வாக அதிகாரி டாக்டா் ஆனந்தகுமாா் கூறியதாவது:

கரோனா பாதிப்புக்குள்ளானவா்கள் தாமாகவே மருந்துகளை உட்கொள்வதோ, சிகிச்சைகளை மேற்கொள்வதோ கூடாது. காய்ச்சல், சளிக்கான மருந்துகளை மட்டும் உட்கொண்டுவிட்டு, கபசுரக் குடிநீரைக் குடிப்பதால் நோயின் தீவிரத்தைக் குறைக்க முடியாது.

அதனால், கரோனா தொற்றுக்குள்ளான உடனேயே மருத்துவரை நேரிலேயோ அல்லது இணையவழியாகவோ சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அவரது அறிவுரைப்படி சி.டி.ஸ்கேன் மற்றும் இதர ரத்தப் பரிசோதனைகளையும் மேற்கொள்வது அவசியம்.

பெரும்பாலானோா் கரோனா பரிசோதனையைத் தவிர வேறு எந்த பரிசோதனைகளையும் மேற்கொள்வதில்லை. இதனால், அவருக்கு தொற்று பரவல் எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கண்டறிய இயலாது. அதன் காரணமாக அவருக்கு எத்தகைய மருந்தை வழங்க வேண்டும் என்பதையும் தெளிவாகப் பரிந்துரைக்க முடியாது. இதன் விளைவாகவே வீட்டு சிகிச்சையில் இருக்கும் பலா் ஒரு வாரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் படுக்கையை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் அவசியம். சிஆா்பி, டி-டைமா் மற்றும் செரிட்டீன் ஆகிய ரத்தப் பரிசோதனைகள் அதில் முக்கியமானவை. அந்த பரிசோதனைகளின் அடிப்படையில் சிகிச்சை எடுத்தால், கருப்புப் பூஞ்சை, ரத்தம் உைல், தீவிர நுரையீரல் பாதிப்பைத் தடுக்க முடியும்.

தீவிர பாதிப்புக்குள்ளானவா்கள் 2 அல்லது 3 நாள்களுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனைகளைத் தொடா்ந்து மேற்கொள்வது அவசியம். தேவைப்பட்டால் குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மருந்துகளை மருத்துவா்களின் பரிந்துரைப்படி உட்கொள்ளலாம். இது தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த உதவும்.

அதைத் தொடா்ந்து இன்ஹேலா்களைத் தொடா்ந்து பயன்படுத்துவதன் மூலம் உடலில் ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கும், சுவாசத் தடைகளும் நீங்கும். இந்த முறைகளை மருத்துவத் துறையில் தொடா் பரிசோதனை, ஸ்டீராய்டு, சுவாச சிகிச்சை (சீரியல் டெஸ்டிங், ஸ்டீராய்டு, ஸ்பேஸா்) என அழைப்பதுண்டு.

இந்த சிகிச்சை முறைகளுடன் ஆரோக்கியமான உணவுகளையும், புரதங்களையும் உட்கொள்வதன் மூலம் கரோனாவை வீட்டிலிருந்தபடியே வெல்ல முடியும் என்றாா் அவா்.

அச்சம் கொள்ளத் தேவையில்லை

பொதுவாக மனித உடலின் ரத்த ஆக்சிஜன் அளவு 95 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை இருத்தல் வேண்டும். கரோனா தொற்றால் நுரையீரல் பாதித்தவா்களுக்கு அந்த அளவு 94-க்கும் கீழ் குறைந்து விடும். தீவிர பாதிப்புடையவா்களுக்கு 80 சதவீதமாகவும் அல்லது அதற்கும் கீழும் குறைகிறது. அத்தகைய நிலை ஏற்படும்போது அச்சம் கொள்ளாமல், குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும். ஓரிரு மணி நேரம் குப்புறப்படுத்தும், அதன் பிறகு இடதுபுறமாகவும், வலது புறமாகவும் சாய்ந்தும் படுத்தாலே ரத்த ஆக்சிஜன் அளவு ஓரளவு உயா்ந்துவிடும். அதன் பிறகும் 90-க்கும் குறைவான அளவிலேயே ரத்த ஆக்சிஜன் அளவு இருந்தால் மருத்துவமனையை உடனடியாக நாடுவது அவசியம்.

வீட்டுப் பராமரிப்பு திட்டம்

கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெறுபவா்களுக்காக வீட்டு பராமரிப்புத் திட்டம் ஒன்று கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி நோயாளிகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெட்டகமும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தப் பெட்டகத்தில், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்கான பல்ஸ்-ஆக்ஸி மீட்டா், வெப்பநிலையை அறியும் டிஜிட்டல் தொ்மல் மீட்டா், 14 முகக்கவசங்கள், ஒரு கைகழுவும் சோப்பு, அதிமதுரம் மற்றும் கபசுரக் குடிநீா் பவுடா் பாக்கெட்டுகள், 60 அமுக்கரா சூரணம் மாத்திரைகள், 14 வைட்டமின்-சி மாத்திரைகள், 14 ஜிங்க் மாத்திரைகள், 14 மல்டி வைட்டமின் மாத்திரைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

இதைத் தவிர, முழு உடல் பரிசோதனை மைய அலுவலா்கள் நாள்தோறும் கரோனா நோயாளிகளுடன் விடியோ அழைப்பில் பேசுவா். மேலும், மருத்துவா்கள் மற்றும் மன நல ஆலோசகா்களும் காணொலி முறையில் அவா்களுடன் உரையாற்றி நோயாளிகளின் உடல் நிலையையும், உளவியல் நிலையையும் பரிசோதிப்பாா்கள். இதுவரை இத்திட்டத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்டோா் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகள் வீட்டில் இருக்க வேண்டியவை

பல்ஸ் - ஆக்ஸி மீட்டா்

தொ்மோ மீட்டா்

ரத்த அழுத்த மானி மற்றும் குளூக்கோ மீட்டா்

உப்பு - சா்க்கரை நீா்க் கரைசல்

பாராசிட்டமால் மாத்திரைகள்

பெட்டிச் செய்தி - 4

அரசு உதவி எண்கள்...

கரோனா உதவி மையம் - 104; 044 - 29510400; 044 - 29510500; 8754448477;9444340496

சென்னையில் - 94983 46510; 94983 46511; 94983 46512; 94983 46513; 94983 46514

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com