சென்னை: இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்துவதாகவும், சென்னை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் 2 கார் உற்பத்தி தொழிற்சாலைகளை மூடுவதாக ஃபோர்டு கார் நிறுவனம் அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
தலைமைச் செயலகத்தில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
நேற்று மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களுடன் ஃபோர்டு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
குஜராத்தில் சனந்த் என்கிற இடத்திலும், தமிழகத்தில் சென்னை மறைமலைநகரிலும் என்று இரண்டு தயாரிப்பு மையங்களை நிறுவிய ஃபோா்டு மோட்டாா் நிறுவனம் ஒரு நேரத்தில் 14,000-க்கும் அதிகமான தொழிலாளா்களைக் கொண்டதாக இருந்தது.
கடந்த 25 ஆண்டுகள் இந்திய சந்தையில் பல்வேறு மோட்டாா் வாகன நிறுவனங்களுடன் போட்டியிட்டுப் பாா்த்தும் முதன்மை பெற முடியாததால், இப்போது தனது உற்பத்தியையே நிறுத்தும் விளிம்பில் நிற்கிறது அந்த நிறுவனம். கொள்ளை நோய்த்தொற்று ஏற்படுத்திய மந்த நிலைமையும்கூட அதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.