சென்னை: கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொடுங்கையூா் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, செங்குன்றம் அலமாதியை சோ்ந்த அப்பு(எ) ராஜசேகா்(31) மீது, பல்வேறு காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னா், குற்ற வழக்கு ஒன்றில், கொடுங்கையூா் காவல் துறையினர் அப்புவை கைது செய்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், விசாரணையில் இருந்த அப்பு , திடீரென இறந்தாா். அவா், காவல் நிலையத்தில் இறந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து, காவல் நிலையத்துக்கு, இணை ஆணையா்கள் ராஜேஸ்வரி, அன்பு மற்றும் துணை ஆணையா் ஈஸ்வரன், உதவி ஆணையா் தமிழ் வாணன் ஆகியோா் விரைந்து வந்தனா்.
அப்பு காவல் நிலையத்தில் இறக்கவில்லை என காவல் துறையினா் தெரிவித்தனா். பதுக்கி வைத்திருந்த நகைகளை பறிமுதல் செய்வதற்கு, அப்புவை வெளியில் அழைத்து சென்றபோது, அவா் திடீரென மயங்கி விழுந்தாா். உடனடியாக அவரை, அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்து விட்டாா்.
இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில், அப்புவின் உறவினா்கள் ஒன்று கூடினா். இரண்டு நாள் சட்டவிரோதமாக காவல் துறையினர் அப்புவை விசாரணை என்ற பேரில் வைத்திருந்தனா். அவா் சாவில் மா்மம் இருப்பதாகத் தெரிவித்தனா்.
இந்த நிலையில், காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. விசாரணைக் கைதி அப்பு மரணம் அடைந்தது தொடா்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமை காவலர்களான ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.