சென்னை: ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் பொதுவான பகுதி குடியிருப்பு உரிமையாளர்களுக்குச் சொந்தமானது என்றும், கட்டடம் கட்டுபவருக்கு அல்ல எனவும் சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.
ஒரு குடியிருப்பை கட்டும்போது, அங்கு விடப்படும் பொதுவான பகுதியானது, கட்டப்படும் குடியிருப்பு நிலத்தின் ஒருபகுதிதான். அத்தகைய வசதி குடியிருப்பின் உரிமையாளர்களுக்குச் சொந்தமானது என்று கருதி, அத்தகைய நிலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை அடுக்குமாடி உரிமையாளர்கள் சங்கத்திடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
சென்னையை அடுத்த ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு குடியிருப்பின் உரிமையாளர்கள் சங்கத்தினர் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு குடியிருப்பில், பொதுவான இடம் என்று ஒரு நிலத்தை கட்டுமான நிறுவனம் காண்பித்துவிட்டால், அதில் என்ன உருவானாலும் அந்த இடமும், அதில் உள்ள அனைத்தும் குடியிருப்பின் உரிமையாளர்களுக்கே சொந்தம்.
பிரிக்கப்படாத இந்த பொதுவிடத்தின் கணக்கீட்டில் தவறு இருந்தால், அந்தத் தவறை கட்டுமான நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள முடியாது. மாறாக, கணக்கீட்டில் இருக்கும் தவறைத்தான் திருத்த வேண்டும் என்றும், பொதுவிடம் விற்பனை செய்யப்படாவிட்டால், குடியிருப்பு உரிமையாளர்கள் அதனை விலை கொடுத்து வாங்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க.. சொந்த மக்களை அரசே சுரண்டக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்
தனியார் கட்டுமான நிறுவனத்தின் மூலம் ஆழ்வார்பேட்டையில் உருவாக்கப்பட்ட குடியிருப்புக்குச் சொந்தமான பொதுவான பகுதியில் கட்டப்பட்ட கட்டடத்தின் உரிமை தொடர்பான வழக்கில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர்களின் கோரிக்கை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், எஃப்எஸ்ஐ அல்லாத பகுதிகளை விற்பனை செய்ய முடியாது. அவ்வாறு கட்டுமான நிறுவனம் அதனை விற்பனை செய்வது, "அனுமதிக்கப்பட்ட திட்ட அனுமதியை தெளிவாக மீறும் செயல்" என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.
"நிலத்தில் பிரிக்கப்படாத பங்கைக் கணக்கிடுவதற்கான தவறான கண்கீட்டைப் பயன்படுத்தி கட்டுமான நிறுவனம், குடியிருப்பை வாங்கியவர்களை ஏமாற்றிவிட்டார்" என்று கூறியிருக்கும் நீதிமன்றம், நிலத்தில் பிரிக்கப்படாத பங்கு பொதுவாக நிலத்தின் பரப்பளவை மொத்தமாகக் கூட்டி, குடியிருப்பின் எண்ணிக்கையால் பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.