சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஒட்டி ஒரு பெரிய நீர்நிலை உள்ளது. இந்த நீர்நிலையானது உள்ளூர் குடியிருப்புக்கான நீர் ஆதாரத்தை வழங்குகிறது. மேலும் நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரிக்க உதவுகிறது.
கடந்த ஒரு வாரமாக இந்த நீர்நிலையில் அனுமதியில்லாத தனியார் அல்லது அரசு அதிகாரிகளால் லாரிகளில் கொண்டு வந்து மண்கள் நிரப்பப்படுகிறது. இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் மண் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு நீர்நிலைகள் மூடப்படுவதால் வெள்ளம் மற்றும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதோடு, அருகில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையமும் பாதிக்கும் அபாயம் உருவாகலாம். இயற்கைவளமான நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதால் சுற்றுச்சூழலும் பெரிதும் பாதிக்கப்படும்.
மேலும், தினமும் ஏராளமான பறவை இனங்கள் சுற்றித் திரிகின்றன. அவற்றிற்கான உணவு ஆதாரமாகவும் இந்த நீர்நிலை உள்ளது.
எந்த ஒரு நீர்நிலையையும் மூடக்கூடாது என அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நீர்நிலையில் மண்கள் நிரப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நீர்நிலையைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அழிவிலிருந்து நீர்நிலையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்குரைஞர் என். உமாபதி வலியுறுத்தியிருக்கிறார்.