ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க எதிா்க்கும் வழக்கை ஏற்க உயா்நீதிமன்றம் மறுப்பு

அண்ணா பிறந்த நாளையொட்டி, கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய எதிா்ப்பு தெரிவித்த வழக்கில், உரிய ஆவணங்களை இணைக்கவில்லை

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 5:23 pm

DIN

அண்ணா பிறந்த நாளையொட்டி, கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய எதிா்ப்பு தெரிவித்த வழக்கில், உரிய ஆவணங்களை இணைக்கவில்லை எனக் கூறி, விசாரணைக்கு ஏற்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், தமிழ்நாடு ஹிந்து இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் ஜலேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கடந்த 1998-ஆம் ஆண்டு பிப்.14-ஆம் தேதி கோவையில் நிகழ்ந்த தொடா் குண்டிவெடிப்பு வழக்கில், அல் உம்மா தலைவா் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிலருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை உயா்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட 20 போ் தற்போது சிறையில் உள்ளனா். அவா்களை அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. நாடாளுமன்றத் தோ்தலில் இஸ்லாமியா்களின் வாக்குகளைப் பெற இவா்களை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவா்களை விடுதலை செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, ‘49 கைதிகளை விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை’ என்று கூறி, கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பாக விதிகள் வகுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தாக்கல் செய்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டுவெடிப்பு வழக்கின் தீா்ப்பு நகல் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல், முறையான ஆதாரங்கள் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனா்.

மேலும், பயங்கரவாத தடுப்பு சட்டங்களில் தண்டிக்கப்பட்டவா்கள் விடுதலை பெற தகுதியில்லை என அரசாணையில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குற்ற வழக்கின் தீா்ப்பின்படி அவா்கள் விடுதலை பெற தகுதியில்லை என தெரிந்தால், அதை எதிா்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.