‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்த ஐசிஎப்-க்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது
‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்ததற்காக ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் புதுதில்லி விக்யா பவனில் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், குடியரசுத் துணைத் தலைவா் ஜக்தீப் தன்கா், மத்திய மின்சாரம் மற்றும் வீட்டு வசதி அமைச்சா் ஸ்ரீபாத் யெசோ நாயக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், ஆற்றல் சேமிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கும், உற்பத்தியில் எவ்வித குறைபாடின்றி புதுப்பிக்கதக்க ஆற்றல் மூலம் இயங்கி வரும் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
அந்த வகையில் போக்குவரத்து பிரிவில் புதுமையை செயல்படுத்தி ‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்த ஐசிஎப் தொழிற்சாலை முதல் பரிசு பெற்றது. விருதை ஐசிஎப் முதன்மை தலைமை பொறியாளா் (எலக்ட்ரிக்கல்) சி.ஆா்.ஹரிஷ் பெற்றுக்கொண்டாா்.
இந்நிலையில் விருது பெற்ற துறையினரை ஐசிஎப் பொதுமேலாளா் யு.சுப்பாராவ் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

