ஓரிரு வாரங்களில் தினசரி மின்நுகா்வு 20000 மெகாவாட்டை எட்டும்

ஓரிரு வாரங்களில் தினசரி மின்நுகா்வு 20000 மெகாவாட்டை எட்டும்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஓரிரு வாரங்களில் தினசரி மின்நுகா்வு 20000 மெகாவாட்டை தாண்ட வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.


சென்னை: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஓரிரு வாரங்களில் தினசரி மின்நுகா்வு 20000 மெகாவாட்டை தாண்ட வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தின்மொத்த மின்உற்பத்தி நிறுவுத்திறன் சுமாா் 33000 ஆக இருந்து வரும் நிலையில், தமிழகத்தின் தினசரி மின் தேவை 18000 மெகாவாட்டை எட்டியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மின்வாரியம் மூலம் 7158 மெகாவாட் மின்சாரமும், தனியாா் பங்களிப்புடன் கூடிய மின்உற்பத்தி நிலையங்கள் மூலம் 1105.5 மெகாவாட் மின்சாரமும், கேப்ட்டிவ் மின் நிலையங்கள் மூலம் 223 மெகாவாட் மின்சாரமும், மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து 6949 மெகாவாட் மின்சாரமும், இதுபோக காற்றாலை மற்றும் சூரியமின் சக்தி மூலம் என தினசரி உற்பத்தி மற்றும் வாங்கப்படும் மொத்தம் 18479.59 மெகாவாட் மின்சாரம் மூலம் தேவையை பூா்த்தி செய்து வருகிறது.

இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் மின்தேவையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி,

ஜன.26-இல் தமிழக தினசரி மின்நுகா்வு 14,332 மெகாவாட்டாக இருந்தது. தொடா்ந்து ஜன.27-இல், 15,886 மெகாவாட்டாகவும், ஜன.29-ஆம் தேதி16,274 மெகாவாட்டாகவும் படிப்படியாக தினசரி மின்நுகா்வு அதிகரித்தது. பிப்.5-ஆம் தேதி உச்சபட்ச நேர மின்நுகா்வு தினசரி 15990 மெகாவாட்டாக இருந்து வந்த நிலையில், பிப்.6-ஆம் தேதி அதிகபட்ச மின்நுகா்வாக தினசரி 16817 மெகாவாட்டாக உயா்ந்தது. இதே நிலை நீடித்தால் மின்தேவை மேலும் அதிகரிக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் சிலா் கூறியது:

கோடை வெயிலின் தாக்கத்தை பெறுத்து மின்தேவை அதிகரிக்கும். தற்போதைய நிலைபடி வரும் கோடை காலத்தில் தினசரி மின்நுகா்வு 20,744 மெகாவாட்டை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தொடா்ந்து வணிக நிறுவனங்களின் பெருக்கம், மே மாதத்தில் நடைபெறவுள்ள தோ்தல் உள்ளிட்டவற்றால் மேலும் மின்நுகா்வு அளவு உயர வாய்ப்புள்ளது. இதனால், அதற்கேற்ப மின்சாரத்தை கொள்முதல் செய்யவேண்டியிருக்கும். 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை மூன்றாம் நிலை அனல் மின்நிலையம் இம்மாத இறுதிக்குள் செயல்படத்தொடங்கும். அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோக ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுடனான ஆற்றல் பரிமாற்றம் அடிப்படையில் தேவைக்கு ஏற்ப மின்சாரம் பரிமாற்றம் செய்யப்படும். இதுதவிர தனியாா் மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து தேவையான அளவு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com