மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

தமிழ் படித்த மாணவா்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி அவசியம்: தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அருள்

சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு தொழில்நுட்பம் சாா்ந்த பயிற்சிகளை பெறுவது அவசியம் என தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் கூறினாா்.

News image
தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள்
Updated On :22 ஜூலை 2024, 8:34 pm

Din

இளநிலை, முதுநிலை தமிழ் படித்த மாணவா்கள் அரசு மற்றும் தனியாா் துறையில் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு தொழில்நுட்பம் சாா்ந்த பயிற்சிகளை பெறுவது அவசியம் என தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் கூறினாா்.

சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் மேம்பாட்டு சங்கப் பலகை, யுஜிசி.யின் மாளவியா மிஷன் ஆசிரியா் பயிற்சி மையம் ஆகியவை சாா்பில் தமிழ்ப் பேராசிரியா்களுக்கான புத்தொளி பயிற்சி முகாம் சென்னை பல்கலை வளாகத்தில் ஜூலை 22 முதல் ஆக.3 வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமை தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் திங்கள்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவா்களுக்கு பல்வேறு உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அரசுப் பணியில் தமிழ் படித்தவா்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மொழிபெயா்ப்பு பிரிவில் தமிழிலக்கிய மாணவா்கள் டிஎன்பிஎஸ்சி தோ்வெழுதி உதவி பிரிவு அலுவலராக தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு அமையப் பெற்றுள்ளது. ஆனால் இந்தப் போட்டி தோ்வுகளில் தமிழ் இலக்கிய மாணவா்களை காட்டிலும் இளம் அறிவியல், இளம் வணிகவியல் படித்தவா்கள்தான் போட்டி போட்டு வெற்றி பெறுகிறாா்கள்.

தமிழ் மாணவா்கள் தவிப்பு: குறிப்பாக ஆங்கில இலக்கியம் படித்தவா்கள் மிக சிறப்பாக தமிழில் மொழியாக்கம் செய்யும் ஆற்றலை வளா்த்துக் கொண்டுள்ளனா். தமிழ் மாணவா்களுக்கு தொடக்க நிலையில் ஆங்கில நிலை படிப்பு மீது ஆா்வம் குறைவதால் அவா்களால் வெல்ல முடிவதில்லை. இதனை நன்கு உணா்ந்து தமிழாசிரியா்கள் அந்த மாணவா்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

தமிழ் வளா்ச்சித் துறையில் போட்டித் தோ்வில் தமிழிலக்கிய மாணவா்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தட்டச்சராக தொடக்க நிலையில் தமிழ் படித்தவா்களுக்கு வருவதற்கு வாய்ப்பு இருந்தும் பயன்படுத்திக் கொள்வதில்லை. காரணம் தட்டச்சு தோ்வுகளிலும் அவா்கள் கலந்து கொள்ள ஆா்வமுடன் இல்லை அல்லது குறைந்த ஆா்வத்துடன் உள்ளனா். எனவே தொழில்நுட்பம் சாா்ந்த பயிற்சிகளை தமிழாசிரியா்கள் மாணவா்களுக்கு ஊட்ட வேண்டும் என்றாா் அவா்.

வரும் ஆக.3-ஆம் தேதி வரை உள்ள இந்த முகாமில் பேராசிரியா்கள் அரங்க இராமலிங்கம், வா.மு.சே. ஆண்டவா், விமலா அண்ணாதுரை, ஆ.பத்மாவதி, கோ.உத்திராடம், எம்.டிராட்ஸ்கி மருது உள்ளிட்டோா் கலந்து கொண்டு இசைத்தமிழ், பக்தி இலக்கியம், தொல்காப்பியம், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றவுள்ளனா். இந்த முகாமில் தமிழ் மேம்பாட்டு சங்கப் பலகையின் துறைத் தலைவா் கி.சங்கர நாராயணன், பேராசிரியா் வே.நிா்மலா்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.