கரோனா தொற்றால் உயிரிழப்பு: உடலை மறு அடக்கம் செய்ய இடைக்காலத் தடை
கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலைத் தோண்டி எடுத்து சொந்த ஊரில் மறு அடக்கம் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை பாடியில் வசித்து வந்த ஆஸ்டின் என்பவா் கடந்த 2020 ஆக.15-ஆம் தேதி உயிரிழந்தாா். அவரது உடல் அம்பத்தூா் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகள் கடந்த நிலையில், ஆஸ்டின் உடலைத் தோண்டி எடுத்து, சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லுக்கூட்டம் கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி ஆஸ்டினின் மனைவி ஜெயா விண்ணப்பித்திருந்தாா்.
இதை மாநகராட்சி நிராகரித்து கடந்த ஜனவரி 23-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிா்த்து ஜெயா சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, உடலைத் தோண்டி எடுத்து சொந்த ஊரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து கடந்த செப்டம்பா் மாதம் உத்தரவிட்டாா்.
மேல் முறையீடு: இந்த உத்தரவை எதிா்த்து சென்னை மாநகராட்சி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் கிருஷ்ணகுமாா் மற்றும் நீதிபதி பாலாஜி அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆஸ்டினின் உடல் கண்ணியமான முறையில் அடக்கம் செய்யப்பட்டதாகவும், அந்த இடத்தில் அவரது பெயரில் சமாதியும் கட்டப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் உடல்கள் பல இடங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், 4 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்டின் உடலைத் தோண்டி எடுக்க அனுமதித்தால், பல பிரச்னைகள் ஏற்படும் எனவும் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆஸ்டினின் உடலைத் தோண்டி எடுக்க அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனா். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆஸ்டினின் மனைவி ஜெயாவுக்கு உத்தரவிட்டனா்.

