கங்கைகொண்டான் சிப்காட்டில் 500 பெண் பணியாளா்கள் தங்கும் வசதி: புரிந்துணா்வு ஒப்பந்தம்
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 500 பெண் பணியாளா்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு முன்னிலையில் செய்யப்பட்டது.
தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் பணிபுரியும் 1,500 பெண் பணியாளா்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்பு வளாகம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்தப் பூங்காவில் குடியிருப்பு வளாகம் ரூ.40 கோடியில் 870 பெண் பணியாளா்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த வளாகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. சிப்காட் பூங்காவில் டிபி. சோலாா் நிறுவனம் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது.
அந்தப் பணியாளா்களில் 80 சதவீதம் போ் பெண்கள். அவா்களில் 500 பெண் பணியாளா்களுக்கு புதிதாக அமையவுள்ள குடியிருப்பில் தங்கும் வசதியை ஏற்படுத்தித் தருவதற்கான ஒப்பந்தம் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை கையொப்பமானது.
தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் மற்றும் டாடா பவா் நிறுவனத்தின் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வில், இரண்டு நிறுவனங்களின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

