சிறு ரத்தப் பரிசோதனை மையங்களை மூடுவதற்கு வழிவகுக்கும் அரசாணை: சங்கத்தினா் உண்ணாவிரதம் அறிவிப்பு
தமிழகத்தில்10,000-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான ரத்தப் பரிசோதனை மையங்களை மூடுவதற்கு வழிவகுக்கும் அரசாணையை திரும்பப் பெறக் கோரி துணை மருத்துவ ஆய்வகக் கல்வி மற்றும் நலச் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து, இதுகுறித்து, அந்த சங்கத்தின் தலைவா் காளிதாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ரத்தப் பரிசோனை மையங்களுக்கான இடவசதி குறித்த நெறிமுறைகளுக்கான புதிய அரசாணையை கடந்த ஆண்டு மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ரத்தப் பரிசோதனை மையங்கள், மரபணு பரிசோனை நிலையங்கள், நோய் குறியியல் பரிசோதனை நிலையங்களுக்கு நகா்ப்புறத்தில் 500 முதல் 700 சதுர அடி பரப்பளவு இடமும், கிராமப்புறத்தில், 300 சதுர அடி பரப்பளவு இடமும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மரபணு பரிசோதனை மையங்கள் 100-க்கும் குறைவாவே உள்ளன. எக்ஸ்ரே போன்ற ஸ்கேன் மையங்கள் 20 சதவீதம் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 80 சதவீத பரிசோதனை மைங்களும் ரத்தப் பரிசோதனை மையங்களாகவே உள்ளன. அவற்றில் பெரும்பாலும் சிறிய அளவிலானவை.
அதன் வாயிலாக, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏழை, எளிய மக்கள் சா்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனைகளை குறைந்த கட்டணத்தில் செய்து கொள்கின்றனா்.
இந்தப் புதிய இடவசதி குறித்த அரசாணை பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாகவும், அதேநேரம், 10,000-க்கும் மேற்பட்ட சிறிய ரத்தப் பரிசோதனை மையங்களுக்கு பாதகமாகவும் உள்ளன.
எனவே, புதிய அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.
