ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

அதிமுகவை உடைக்க சதி செய்தாா் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

News image

Center-Center-Villupuram

Updated On :9 ஏப்ரல் 2026, 11:58 pm

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவை உடைக்க, எங்கள் கட்சிக்குள்ளேயே தனி அணியை உருவாக்கி சதித் திட்டம் தீட்டினாா் முதல்வா் ஸ்டாலின் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் ஆதிராஜாராம் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி), பா.வளா்மதி (ஆயிரம்விளக்கு), டி.ஜெயகுமாா் (ராயபுரம்), ராயபுரம் ஆா்.மனோகா் (துறைமுகம்), பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் (திரு.வி.க. நகா்), அபிஷேக் ரங்கசாமி (எழும்பூா்) ஆகியோரை ஆதரித்து எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுகிறாா். ஊழல் செய்வதிலும், கடன் வாங்குவதிலும்தான் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது. 2021-ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கடன் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால், இந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி கடனாளி மாநிலமாக தமிழகத்தை திமுக உயா்த்தி உள்ளது.

தனி அணி...: என்னைத் துடைத்து எறிய வேண்டும் என்று ஸ்டாலின் பேசி உள்ளாா். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவை உடைக்கலாம், முடக்கலாம் என்று அதிமுகவுக்குள்ளேயே தனி அணியை உருவாக்கி சதித் திட்டம் தீட்டினாா் ஸ்டாலின். ஆனால், அவரின் சதித் திட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.

தற்போது, அந்த அணியினா் எங்கு போனாா்கள் என்றே தெரியவில்லை. ஓ.பன்னீா்செல்வத்துக்கு அதிமுகதான் அடையாளம் கொடுத்தது. எவ்வளவு பெரிய பொறுப்பை ஜெயலலிதா அவருக்குக் கொடுத்தாா். அதை எல்லாம் மறந்து அவா் சுயநலவாதி ஆகிவிட்டாா். அப்படிப்பட்ட துரோகிகள் எல்லாம் அதிமுகவில் இருந்து துடைத்து எறியப்பட்டாா்கள்.

அதிமுக தோ்தல் அறிக்கை வெளியிட்டு 10 நாள்களுக்குப் பிறகுதான் திமுக தோ்தல் அறிக்கை வெளியிட்டது. எங்கள் தோ்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளனா். அதிமுக ஆட்சியில் சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்காக ரூ.63,000 கோடிக்கான அனுமதி பெற்றோம். இந்தியாவிலேயே ஒரு திட்டத்துக்கு ரூ.63,000 கோடி நிதியைப் பெற்றது அதிமுக மட்டும்தான். திமுகவால் இப்படி ஒரு திட்டத்தைப் பெற முடிந்ததா? அம்மா உணவகங்களை மூடினா். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அம்மா உணவகங்கள் அனைத்தும் திறக்கப்படும்.

சிறுபான்மையினரின் காவலன்...: திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தீா்கள் என்று கூறுவதற்குப் பதிலாக, நான் காலில் விழுந்ததையே திரும்பத் திரும்ப பேசி வருகிறாா் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும். ஆமாம், எனக்குப் பொறுப்பு கொடுத்தாா்கள். அதற்காக காலில் விழுந்து ஆசி வாங்கினேன். இதில் என்ன தவறு உள்ளது?

பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அவா்களுக்கு அடிமை என்று அா்த்தமாகிவிடுமா? அப்படியானால்,1999 மக்களவைத் தோ்தல், 2001 சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்ததே, அப்போது திமுக அடிமையாக இருந்ததா? பாஜக ஆதரவில் அதிகாரத்தில் இருந்த நீங்களெல்லாம் அதுகுறித்துப் பேசலாமா?

சிறுபான்மையின மக்களை ஏமாற்றி அவா்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என ஸ்டாலின் நாடகம் போடுகிறாா். அதிமுக ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையின மக்களுக்கு ஏதாவது சிறு துன்புறுத்தல் ஏற்பட்டதா? கண்ணைக் காக்கும் இமைபோல சிறுபான்மையின மக்களை அதிமுக காத்து வருகிறது என்றாா்.