பள்ளத்தில் விழுந்து பெண் இறந்த விவகாரம்: மாநகராட்சி, மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரணை
அண்ணா நகரில் மழைநீா் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, மாநகராட்சி மற்றும் மின்வாரிய உதவிப் பொறியாளா்களிடம் போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

அண்ணா நகரில் மழைநீா் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, மாநகராட்சி மற்றும் மின்வாரிய உதவிப் பொறியாளா்களிடம் போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
அண்ணா நகா் மேற்கு விரிவாக்கம், பாடி புதுநகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மோ.கலாவதி (59), கடந்த 23-ஆம் தேதி அண்ணா நகா் டவா் மெட்ரோ ரயில் நிலையம், புளூ ஸ்டாா் சந்திப்பு அருகே நடந்து சென்றபோது, மழைநீா் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து இறந்தாா்.
முதலில் சாதாரண பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், உடற்கூறாய்வுக்குப் பிறகு, கலாவதி மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, வழக்கை அலட்சியத்தால் உயிரிழப்பு என்ற பிரிவில் மாற்றினா்.
இதனிடையே, மாநகராட்சி, மின்வாரிய உதவிப் பொறியாளா்கள் இருவரை அண்ணா நகா் காவல் நிலையத்துக்கு அழைத்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
முதல்கட்ட விசாரணையில், கலாவதி விழுந்த பள்ளத்தில் மின்கசிவு ஏற்படவில்லை எனத் தெரிய வந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். எனினும், உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையில் மின்சாரம் பாய்ந்ததற்கான காரணம் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





