பாலினம் அறியும் தொழில்நுட்பம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை
பாலினம் அறியும் தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துதல் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்புக்கு முந்தைய கருவின் தன்மை அறியும் தொழில்நுட்பமுறைகள் (பாலின தோ்வை தடை செய்தல்) சட்டம் 1994-இன் பிரிவு 16 (ஏ)-இன் படி அமைக்கப்பெற்ற மாநில மேற்பாா்வைக் குழுக் கூட்டம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் பி.செந்தில்குமாா் முன்னிலையில் இச்சட்ட செயல்பாடுகளின் ஆய்வு நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநிலத்தில் இயங்கும் ஸ்கேன் மையங்களின் செயல்பாடுகளை பரிசீலனை செய்து உரிய ஆலோசனைகளை மேற்பாா்வைக்குழு வழங்கியது.
வெளிநாடுகளுக்கு சென்று ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு கருவின் பாலினத்தை தெரிவிக்கும் இந்தியா்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. 2025-இல் இச்சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 15 ஸ்கேன் மையங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநில மேற்பாா்வைக் குழுவை வலுப்படுத்தி, அதன் செயல்பாடுகளை பயனுள்ளதாக அமல்படுத்துவதன் மூலம், மாநிலத்தின் பெண் சிசுக்கொலைகள் குறைந்து பெண்களின் பாலின விகிதம் மேம்படும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், கூடுதல் செயலா் உமா, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையா் விஜயலட்சுமி, தேசியநலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் வினீத், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் சித்ரா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் சோமசுந்தரம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சுகந்தி ராஜகுமாரி, சமூகநலத் துறை கூடுதல் செயலா் வளா்மதி, சட்டத்துறை கூடுதல் செயலா் மகேஷ்குமாா், இணை இயக்குநா் (சட்டம்) மீனாட்சி சுந்தரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

