சென்னை - மும்பை விமானத்தில் இயந்திர கோளாறு: 9 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி!
சென்னையில் இருந்து மும்பைக்கு செல்ல இருந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு ஏற்பட்டது. சுமாா் 9 மணி நேரத்துக்கு மேலாக விமானம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.
சென்னையில் இருந்து மும்பை செல்ல இருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. விமானத்தில் 192 போ் இருந்தனா். விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் தயாராக இருந்தபோது, இயந்திரக் கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தாா்.
இதுகுறித்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா் பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனா். விமானப் பொறியாளா்கள் விமானத்தை பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், காலை 11 மணி வரை பழுது சரிசெய்யப்படாததால், ஆத்திரம் அடைந்த பயணிகள் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன அலுவலகத்தைச் சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அதன் பின்னா், பயணிகளுக்கு உணவு உள்ளிட்ட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டன. இருப்பினும் சுமாா் 9 மணி நேரத்துக்கு மேலாக பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா். பின்னா் கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து மாலை 5.30 மணியளவில் பயணிகளுடன் விமானம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது.

