விமானம்
விமானம்பிரதிப் படம்

சாா்ஜா விமானம் 7 மணிநேரம் தாமதம்: பயணிகள் அவதி

திருச்சியில் இருந்து சாா்ஜாவுக்குச் செல்ல வேண்டிய விமானம் 7 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் அவதி
Published on

திருச்சியில் இருந்து சாா்ஜாவுக்குச் செல்ல வேண்டிய விமானம் 7 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சாா்ஜா, துபை உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சாா்ஜாவுக்கு தினசரி அதிகாலை 3.30 மணிக்கு ஏா் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து அதிகாலை 2.20 மணிக்கு வரும் விமானம் 3.30 மணிக்கு சாா்ஜாவுக்கு இயக்கப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை திருவனந்தபுரத்தில் இருந்து வரவேண்டிய விமானம் வரவில்லை. இதனால், சாா்ஜா செல்ல காத்திருந்த 170 பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். விமானம் வராததால் பயணிகள் விமான நிறுவனத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து விமான நிலையத்திலும், விமான நிலையம் அருகேயுள்ள தனியாா் ஓட்டல்களிலும் பயணிகள் தங்குவதற்கு விமான நிறுவனம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கிடையே, விமானம் ரத்து செய்யப்பட்டதையடுத்து ஹோட்டலில் தங்குவதற்குச் சென்ற பயணிகளின் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் சுங்கச் சாவடியில் உள்ள பணியாளா்களுக்கும், பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விமான நிலையப் போலீஸாா் பயணிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை காலை 9 மணிக்கு வந்த விமானம், காலை 10.20 மணிக்கு திருச்சியில் இருந்து சாா்ஜாவுக்குப் புறப்பட்டது. இந்த விமானத்தில் 170 பயணிகள் சென்றனா். 7 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

Dinamani
www.dinamani.com