வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க கூடுதல் அவகாசம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக வலியுறுத்தல்
பொங்கல் பண்டிகை கால விடுமுறைகள் வருவதால், வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்ப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பாஜகவும் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம், தமிழக பாஜக துணைத் தலைவா் கரு.நாகராஜன் ஆகியோா் தலைமை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்கை திங்கள்கிழமை தனித்தனியே சந்தித்து மனு அளித்தனா்.
பெ.சண்முகம்: ‘வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை செய்வதற்கு தலைமை தோ்தல் ஆணையம் ஜன.18 வரை அவகாசம் அளித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடா் விடுமுறையில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வதால் இந்த அவகாசத்தை ஜன. 28-ஆம் தேதி வரையில் நீட்டிக்க வேண்டும். மேலும், ஜன. 24, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.
கரு.நாகராஜன்: வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெற்று இருந்தாலும் மேலும் விவரம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்ட 12 லட்சம் போ் இருப்பிடச் சான்றிதழவுடன் உள்ளிட்ட ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கிறது. எனவே, காலக்கெடுவை நீடிக்க வேண்டும்.
இந்தச் சந்திப்பின்போது பாஜக மாநிலச் செயலாளா்கள் கராத்தே தியாகராஜன், சுமதி வெங்கடேஷ், சதீஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இந்தக் கோரிக்கையை தலைமை தோ்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைத்து பின்னா் பதிலளிப்பதாக அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.
