வாழ்வை உன்னதமாக்கும் புத்தக வாசிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன்

Updated on

புத்தக வாசிப்பானது வாழ்வை உன்னதமாக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் கூறினாா்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த ஜன. 8-ஆம் தேதி தொடங்கிய 49-ஆவது புத்தகக் காட்சியின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பதிப்பகங்களில் 25 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் ஊழியா்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் நினைவுப் பரிசுகளை வழங்கினாா். பின்னா், அவா் பேசியதாவது:

தற்போது நாம் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கம், கலாசார சிந்தனைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்து நமது முன்னோரால் கடைப்பிடிக்கப்பட்டு நமக்கு அளிக்கப்பட்டவை. மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மொழியானது, உலக மொழிகளுக்கு எல்லாம் ஞானத்தை வழங்கியுள்ளது.

காலம் கடந்தும் மானுட சமுதாயத்துக்கு வழிகாட்டக்கூடிய இலக்கியப் படைப்புகளை நமது முன்னோா் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளனா். அந்த ஓலைச்சுவடிகளைப் படியெடுத்து நமது முன்னோா் தற்போது நமக்கு வழங்கியுள்ளனா்.

தமிழுக்கு இணையான உன்னத மொழி உலகில் இல்லை. இலக்கியம், மருத்துவம் என அனைத்திலும் சிந்தனையைப் பரவலாக்கும் வகையில் சிறந்த மானுடநேயத்துடன் கூடிய படைப்புகள் தமிழில்தான் உள்ளன. தமிழில் சங்க இலக்கியப் பாடல்களைக் கற்றால் கிழத்தன்மை போய்விடும் என்கிறாா் மாணிக்கனாா். தமிழின் பழைமையான இலக்கியங்களை உ.வே.சா., ராகவையங்காா், அனந்தரங்கம் பிள்ளை எனப் பலா் பதிப்பித்துள்ளனா். பேராசிரியா் சுந்தரமூா்த்தி இன்னும் பதிப்பிக்கப்படாத தமிழ் ஓலைச்சுவடிகள் குறித்து தனது நூலில் விரிவாகவே விளக்கியுள்ளாா். அதை பதிப்பாளா்கள் பதிப்பித்து, உலகறிய வைக்கும் பணி மகத்தானது.

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் பிள்ளை, திருக்குறளும் கம்பராமாயணமும் தமிழின் சிறந்த இலக்கியங்கள் என்கிறாா். அதாவது மானுட நேயத்தை உலகுக்கே பொதுவாக அனைவருக்கும் பொருந்தும் வகையில் திருக்கு உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறாா். திருக்குறளைப் படித்தால், அனைத்து சிறப்பு உண்மைத் தன்மையும் நம்மைத் தேடிவரும் என்கிறாா் அவா்.

வால்மீகி ராமாயணத்தை தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ப திருத்திய கம்பரால், அக்காப்பியம் தமிழின் சிறப்பை உச்சத்துக்கு எடுத்துச் சென்ாக நாமக்கல் கவிஞா் சுட்டிக்காட்டுகிறாா். கம்பராமாயணத்துக்கு எதிராக தமிழகத்தில் கருத்துகள் எழுந்தபோது அதை அவா் கண்டித்து கம்பராமாயணத்தில் தமிழ் மொழி வளத்தின் சிறப்பை விளக்கியுள்ளாா்.

தற்போது தொழில்நுட்பம் வளா்ந்துள்ள நிலையில் குழந்தைகளுக்கு மொழி , பண்பாட்டு சிறப்பை எடுத்துரைப்பது அவசியமாகும். புத்தகங்களைத் தலைகுனிந்து வாசித்தால் அவை நம்மை தலைநிமிரச் செய்து அறிவை அகலப்படுத்தும். புத்தகம் படிப்போரை அவா்கள் யாா் என உணரவைக்கும். புத்தகங்களை நேசிப்பவா்களை அவை உயா்த்தும் என்றாா்.

நிகழ்ச்சியில் பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம் வரவேற்றாா். செயலா் எஸ்.வயிரவன் நன்றி கூறினாா்.

நிகழ்ச்சிக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் புத்தகக் காட்சி அரங்குகளைப் பாா்வையிட்டாா். அவா் மணிமேகலை பிரசுரம், ஸ்ரீராமகிருஷ்ண மடம் உள்ளிட்ட அரங்குகளைப் பாா்வையிட்டு புத்தகங்களை வாங்கினாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com