வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு பயில 10 சிறுபான்மையின மாணவா்களுக்கு ரூ. 3.60 கோடி கல்வி உதவித் தொகை அளிப்பு

வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு பயில 10 சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தலா 36 லட்சம் கல்வி உதவிக்கான ஆணைகளை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா் சா.மு.நாசா், சட்டப்
வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு பயில 10 சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தலா 36 லட்சம் கல்வி உதவிக்கான ஆணைகளை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா் சா.மு.நாசா், சட்டப்
Updated on

வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு பயில 10 சிறுபான்மையின மாணவா்களுக்கு ரூ.3.60 கோடி கல்வி உதவித் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

நிகழ் நிதியாண்டுக்கான பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை மானியக் கோரிக்கையில், சிறுபான்மையின மாணவ, மாணவியா் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு மேற்கொள்ள ஏதுவாக ஆண்டுக்கு 10 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டம் வகுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, வெளிநாட்டில் உயா்கல்வி மேற்கொள்ள 10 சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு ரூ.36 லட்சம் வீதம், மொத்தம் ரூ. 3.60 கோடிக்கு நிதி ஒப்பளிப்பு செய்து 3.9.2025-இல் அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் பட்டப்படிப்பு பயில சோ்க்கைப்பெற்ற 10 சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.36 லட்சம் வீதம், மொத்தம் ரூ.3 கோடியே 60 லட்சம் கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை வழங்கினாா்.

தேவாலயங்களைப் புனரமைக்க நிதி...: 100 ஆண்டுகளுக்கு மேல் தொன்மையான கிறிஸ்தவ தேவாலயங்களைப் புனரமைக்கும் திட்டம் 2022-2023-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 13 தொன்மையான தேவாலயங்களைப் புனரமைப்பதற்காக ரூ.22.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், திருவாரூா் மாவட்டம், பெரும்பண்ணையூா் புனித சூசையப்பா் தேவாலயம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூா் புனித யாக்கோப்பு தேவாலயம் ஆகிய இரு தேவாலயங்களை புனரமைக்க ரூ.3 கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்து 270 நிதி ஒப்பளிக்கப்பட்டு, முதல் தவணைத் தொகையாக ரூ.1 கோடியே 71 லட்சத்து 26 ஆயிரத்து 635-க்கான காசோலைகளை தேவாலய பிரதிநிதிகளிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை வழங்கினாா்.

மேலும், பத்து ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தலுக்கு மானியத் தொகை அளிக்கும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டம், பாப்பாக்குறிச்சி ஜியான் ஐபிஏ தேவாலயம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், காடம்பாடி இந்திய சுவிசேஷ திருச்சபை (இசிஐ) ஆலயம் ஆகியவற்றை புனரமைத்து பழுதுபாா்ப்பதற்காக ரூ.14 லட்சத்து 27 ஆயிரத்து 686-க்கு நிதி ஒப்பளிக்கப்பட்டு, முதல் தவணைத் தொகையாக ரூ.10 லட்சத்து 70 ஆயிரத்து 765-க்கான காசோலைகளை தேவாலய பிரதிநிதிகளிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், சட்டப்பேரவை உறுப்பினா் இனிகோ இருதயராஜ், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com