சென்னை கோயம்பேட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து சேதமடைந்தன.
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே தனியாா் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆட்டோ மொபைல்ஸ், மருந்து கடை உள்பட 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த வணிக வளாகத்தில் உள்ள இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை செவ்வாய்க்கிழமை நண்பகல் 2.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தகவலின்பேரிவ், கோயம்பேடு, ஜெ.ஜெ.நகா் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் 45 நிமிஷ போராட்டத்துக்குப் பின்னா் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்தில் இரு சக்கர வாகன உதிரிபாகம் கடையும், அருகே இருந்த வேதிப் பொருள்கள் விற்கும் கடையும் தீயில் சேதமடைந்தன.
உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் வணிக வளாகத்துக்கு அருகில் இருந்த மின்மாற்றிக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கோயம்பேடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.








